சென்னை தீவுத்திடலில் நம்ம ஊரு திருவிழாவை அமைச்சர் தங்கம் தென்னரசு, சுற்றுலாத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன் ஆகியோர் இன்று மாலை தொடங்கி வைக்கின்றனர்.

கலை பண்பாட்டுத்துறையும், சுற்றுலாத்துறையும் இணைந்து சென்னை தீவுத்திடலில் தமிழ் மண்ணின் கலைப் பண்பாட்டு பெருமைகளை பறைசாற்றும் நாட்டுப்புறக் கலை வடிவங்களின் சங்கமமாக, ‘நம்ம ஊரு திருவிழா’ என்ற நிகழ்ச்சியை இன்று (திங்கட்கிழமை) மாலை 6 மணிக்கு நடக்கிறது. விழாவை தொழில்கள், தமிழ் ஆட்சிமொழி, தமிழ் பண்பாடு மற்றும் தொல்லியல்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, சுற்றுலாத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன் ஆகியோர் தொடங்கி வைப்பார்கள்.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து அந்தந்த மாவட்டங்களுக்கு உரிய கலை வடிவங்கள், நாட்டுப்புறப் பாடல்கள் மற்றும் பண்பாடுகளை எடுத்துரைக்கும் வகையில் இந்த நம்ம ஊரு திருவிழா நிகழ்ச்சி இருக்கும். ஆண்டு தோறும் இந்த நிகழ்ச்சி நடைபெறும். தீவுத்திடலில் பொருட்காட்சி நடத்துவது குறித்து அரசு பின்னர் அறிவிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, கடந்த காலங்களில் கனிமொழி எம்.பி.,யின் முயற்சியால் ‘சென்னை சங்கமம்’ என்ற கலை, பண்பாட்டு விழா சென்னையில் ஒரு வார காலம் நடந்தது. தமிழகம் முழுவதும் பரவிக் கிடக்கும் பல்வேறு கலை, கலாச்சார நிகழ்ச்சிகளை சென்னை நகர மக்களுக்கு அறியப்படுத்தும் வகையில் உருவானதுதான் இந்த சென்னை சங்கமம். இந்த நிகழ்ச்சிக்கு சென்னை மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது.

எனவே, ‘நம்ம ஊரு திருவிழா’ என்ற பெயரில் நடக்கும் நிகழ்ச்சியை, ‘சென்னை சங்கமம்’ என்ற பெயரில் நடத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துவருகிறதே. பொதுமக்களின் கோரிக்கையை முதல்வர் மு.க.ஸ்டாலின் பரிசீலனை செய்வாரா..?

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal