கடந்த சில தினங்களாகவே கடலோர மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்றைய தினம், வானிலை மையம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தது.அதில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மார்ச் 18, 19-ம் தேதிகளில், அதாவது நாளை மற்றும் நாளை மறுநாள் தமிழக கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று தெரிவித்திருந்தது.

மேலும், பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் மற்றும் தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாகவும், இதன் காரணமாக பூமத்திய ரேகை ஒட்டிய இந்திய பெருங்கடல் மற்றும் தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 60 கி.மீ. வேகத்தில் சூறாவளிக் காற்று வீசக்கூடும் என்பதால் நேற்றைய தினம், மீனவர்கள் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டிருந்தது.

இந்நிலையில், வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக வலுப்பெற போவதாகவும், அது வரும் 23ம் தேதி வங்கதேசம் மற்றும் மியான்மரை நோக்கி நகரும் என்றும் வானிலை ஆய்வு மையம் தற்போது அறிவித்திருக்கிறது.. இதுகுறித்து, சென்னை வானிலை ஆய்வு மையம் செய்திக்குறிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது. அதில் உள்ளதாவது: “தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் 18ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவும் சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் கூடுதலாக பதிவாகும்.

சென்னையில் இன்று வானம் மேகமூட்டமாக காணப்படும். இந்திய பெருங்கடல் பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி வங்கக் கடலின் மத்தியப் பகுதியில் நிலவுகிறது. இது வடகிழக்கு திசையில் நகர்ந்து வரும் 19ம் தேதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மற்றும் அதன் பின் வடக்கு வடமேற்கு திசையில் அந்தமான் கடல் ஓரம் வழியே நகர்ந்து 20ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். அதன்பின்னர் புயலாக வலுப்பெற்று 23ம் தேதி வங்கதேசம் மற்றும் வடக்கு மியான்மர் கடலோரப் பகுதியில் நிலவும்.

இதன் காரணமாக தெற்கு வங்க கடலின் மத்தியப் பகுதியில் இன்றும் தெற்கு வங்க கடலின் மத்தியப் பகுதி மற்றும் தெற்கு அந்தமான் பகுதிகளில் நாளையும் மணிக்கு 60 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும். தெற்கு அந்தமான் கடல் பகுதி கிழக்கு வங்க கடல் பகுதிகளில் வரும் 19ம் தேதியும், தெற்கு அந்தமான் பகுதி மற்றும் வடக்கு அந்தமான் பகுதிகளில் வரும் 20ம் தேதியும் மணிக்கு 75 கிலோமீட்டர் வேகம் வரை சூறாவளி காற்று வீசக்கூடும் அதனால் மீனவர்கள் இந்தப் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்” என எச்சரிக்கப்பட்டுள்ளது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal