அ.தி.மு.க.வில் சசிகலா மற்றும் டி.டி.வி.தினகரனை மீண்டும் சேர்க்க வேண்டும் என்று தேனி மாவட்ட அ.தி.மு.க.வினர் கடந்த வாரம் தீர்மானம் நிறைவேற்றினர். இந்த விவகாரம் அ.தி.மு.க.வில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இதற்கிடையே, ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரர் ராஜா சசிகலாவை நேரில் சந்தித்து பேசினார். இந்த சம்பவம் கட்சிக்குள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. கட்சியின் ஒருங்கிணைப்பாளராக உள்ள ஓ.பன்னீர்செல்வத்தின் சொந்த மாவட்டத்தில் இந்த சம்பவம் நடந்ததால் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கடியை ஏற்படுத்தியது.

இதற்கிடையேதொடர்ந்து சசிகலாவை கட்சியில் சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்திய ராஜா உள்ளிட்ட அ.தி.மு.க.வினர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். இந்த நிலையில் இன்று சர்வதேச மகளிர் தினம் அ.தி.மு.க. தலைமைக் கழகத்தில் கொண்டாடப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக ஓ.பன்னீர் செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் நேற்று இரவே சென்னை வந்தனர். இருவரும் இன்று காலையில் தலைமை கழகத்திற்கு வந்தனர். அவர்களை அ.தி.மு.க. தொண்டர்கள் உற்சாகமாக வரவேற்றனர்.

அதனைத் தொடர்ந்து அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள். இதையடுத்து ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் கட்சி அலுவலகத்துக்குள் சென்று தனி அறையில் சிறிது நேரம் இருவரும் ஆலோசனை நடத்தினார்கள். அப்போது பொதுக்குழுவை கூட்டுவது குறித்தும், சசிகலாவை கட்சியில் சேர்ப்பது குறித்தும் சமீபத்தில் ஏற்படுத்திய சர்ச்சை குறித்து பேசியதாக தெரிகிறது.

அதன் பின்னர் இருவரும் தனித்தனியாக புறப்பட்டு சென்றனர். சசிகலாவை கட்சிக்குள் சேர்ப்பது குறித்த சர்ச்சை பேச்சுக்கு பின்னர் தலைமை கழகத்தில் ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் சந்தித்து கொண்டது கட்சி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இது குறித்து மகளிர் அணி செயலாளர் பா.வளர்மதி, ‘‘அ.தி.மு.க.வில் இருபெரும் தலைவர்கள் இருக்கின்றனர். முடிவெடுக்கும் அதிகாரம் அவர்களிடம்தான் இருக்கிறது. சசிகலா உட்பட அனைவர் தொடர்பாகவும் கட்சித் தலைமை எடுக்கும் முடிவுப்படி நடப்போம்’’ என்றார்.

மாஜி அமைச்சர் வளர்மதியின் பேச்சு, மேலும் அ.தி.மு.க. தொண்டர்களை குழப்பம் அடைய வைத்திருக்கிறது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal