நெல்லை மாவட்டம் திசையன்விளை சிறப்பு நிலை பேரூராட்சியில் மொத்தம் 18 வார்டுகள் உள்ளன. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் இந்த பேரூராட்சியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட 9 பேர் வெற்றி பெற்றனர்.

தி.மு.க. சார்பில் 2 பேர், காங்கிரஸ் சார்பில் 2 பேர், பா.ஜனதா, தே.மு.தி.க. சார்பில் தலா ஒருவரும், சுயேட்சைகள் 3 பேரும் வெற்றி பெற்றனர். இதில் 2 சுயேட்சைகள் சமீபத்தில் தி.மு.க.வில் தங்களை இணைத்துக்கொண்டனர்.

இந்நிலையில் அ.தி.மு.க.வை சேர்ந்த 9 கவுன்சிலர்களும் மதுரை ஐகோர்ட்டில் ஒரு மனு செய்தனர். அதில், பேரூராட்சி தலைவர், துணைத்தலைவர் தேர்தலில் ஆளுங்கட்சியினருக்கு ஆதரவு தர வேண்டும் என மிரட்டுவதாகவும், எனவே எங்கள் அணியினருக்கு உரிய போலீஸ் பாதுகாப்பு அளித்து தேர்தலை அமைதியாக நடத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என கூறி இருந்தனர்.

அந்த மனுவின் அடிப்படையில், அ.தி.மு.க. கவுன்சிலர்கள் 9 பேருக்கும் தகுந்த போலீஸ் பாதுகாப்பு அளித்து, தேர்தலை அமைதியாக நடத்த வேண்டும் என கோர்ட்டு உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து இன்று காலை பேரூராட்சி தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான மறைமுகத் தேர்தல் நடைபெற்றது.

இதில் தி.மு.க. சார்பில் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட 12-வது வார்டு கவுன்சிலர் சுபீனாவுக்கு முன்மொழிய யாரும் வரவில்லை. இதனால் அவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. இதைத்தொடர்ந்து பேரூராட்சி 6-வது வார்டில் சுயேட்சையாக போட்டியிட்டு சமீபத்தில் தி.மு.க.வில் சேர்ந்த கமலா நேரு தி.மு.க. சார்பில் தலைவர் வேட்பாளராக நிறுத்தப்பட்டு மனு தாக்கல் செய்தார்.

அ.தி.மு.க.சார்பில் மாவட்ட மகளிரணி செயலாளரும், பேரூராட்சி 3-வது வார்டு கவுன்சிலருமான ஜான்சி ராணி மனு தாக்கல் செய்தார். இதைத்தொடர்ந்து தேர்தல் நடந்தது. இதில் 18 கவுன்சிலர்களும் கலந்து கொண்டனர். செயல் அலுவலர் கோபால் முன்னிலையில் தேர்தல் நடந்தது. இதில் 2 பேருக்கும் தலா 9 ஓட்டுகள் கிடைத்தது. இதனால் குலுக்கல் முறையில் வெற்றியை நிர்ணயிக்க முடிவு செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து நடந்த குலுக்கல் முறையில் அ.தி.மு.க. வேட்பாளர் ஜான்சிராணி வெற்றி பெற்றதாக செயல் அலுவலர் கோபால் அறிவித்தார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal