தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கள்ளக்காதலால், இருவரில் ஒருவர் கொலை செய்யப்படுவது வாடிக்கையாகிவிட்டது. ‘உயிர் பலி’ ஏற்படுத் என்பது தெரிந்தும், கள்ளக்காதல் மோகம், அவர்கள் கண்களை கட்டிப் போட்டுவிடுகிறது என்றே கூறம்.

இந்த நிலையில், கள்ளக்காதலி திருமணம் செய்ய வற்புறுத்தியதால், அவரை கழுத்தை நெரித்து கொலை செய்த போலீஸ்காரர் காவல் நிலையத்தில் சரணடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை சதாசிவம் நகர் திருவள்ளுவர் தெருவை சேர்ந்தவர் பொன்பாண்டி. அவருடைய மனைவி சரண்யா. இவர்களுக்கு தக்‌ஷினா (8), சுதாக்‌ஷினா (5) என்ற 2 மகள்கள் உள்ளனர். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு சாலை விபத்தில் பொன்பாண்டி உயிரிழந்துவிட்டார். இந்நிலையில், மதுரையில் சரண்யா வசித்து வந்தபோது, கடந்த 2019-ம் ஆண்டில் போலீஸ் பணிக்கு தனியார் நிறுவனம் நடத்திய பயிற்சி வகுப்பில் பங்கேற்றார். அந்த பயிற்சி வகுப்புக்கு திருமுருகனும் சென்றிருந்தார்.

அப்போது திருமுருகனுக்கும், சரண்யாவுக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதனிடையே, போலீஸ் வேலை கிடைத்து, மதுரை ஆயுதப்படையில் திருமுருகன் பணியில் சேர்ந்தார். ஆனால், சரண்யாவுக்கு போலீஸ் துறையில் வேலை கிடைக்கவில்லை. அவருக்கு வனத்துறையில் வேலை கிடைத்தது. அதன்படி தேனி வனச்சரக அலுவலகத்தில் வனக்காவலராக சரண்யா பணியில் சேர்ந்தார்.

போடி வனத்துறை அலுவலகம் அருகே உள்ள வாடகை வீட்டில் சரண்யா மட்டும் தனியாக வசித்து வந்தார். அவருடைய 2 மகள்களும் மதுரை யாகப்பாநகரில் உள்ள பெற்றோர் வீட்டில் வசித்து வருகின்றனர். வீட்டில் சரண்யா தனியாக வசித்து வந்ததால் ரொம்ப வசதியாக போய்விட்டது திருமுருகனுக்கு. அடிக்கடி சரண்யா வீட்டிற்கு வந்து திருமுருகன் உல்லாசமாக இருந்து வந்துள்ளார். நாளடைவில் இந்த விவகாரம் திருமுருகன் மனைவிக்கு தெரியவந்தது. இதனால், அதிர்ச்சியடைந்த மனைவி கோபித்துக்கொண்டு பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு சரண்யா வீட்டுக்கு திருமுருகன் வழக்கம்போல வந்தார். அப்போது, அவரிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு சரண்யா வற்புறுத்தியதாக தெரிகிறது. இது தொடர்பாக அவர்களுக்கிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த திருமுருகன், சரண்யாவின் கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு மதுரைக்கு சென்று கீரைத்துறை போலீஸ் நிலையத்தில் சரணடைந்தார். இதனையடுத்து, கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

கள்ளக்காதல் விவகாரத்தில் பெண் வனக்காவலர் கொலை செய்யப்பட்ட சம்பவம் போடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal