தமிழக முதல்வர் விஜய் வருகிற 10ம் தேதி கரூர் செல்ல இருப்பதாகவும் அதற்கான இடம் தேர்வும் நடந்து வருகிறது. இந்த நிலையில்தான் முதல்வர் விஜய்யின் கரூர் பயணம் ரத்தாக வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.
கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில், கடந்த 2025 செப்டம்பரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்துக்குப் பிறகு, தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.20 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டது. மேலும், பாதிக்கப்பட்ட குடும்பங்களை மாமல்லபுரத்தில் உள்ள தனியார் விடுதிக்கு அழைத்து சந்தித்தார்.
அப்போது கட்சித் தலைவராக இருந்த விஜய், தேர்தலுக்குப் பிறகு நேரில் கரூருக்கு வந்து அனைவரையும் சந்திப்பதாக உறுதியளித்திருந்தார். அதன்பிறகு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக வெற்றி பெற்று ஆட்சியை அமைத்தது. முதல்வராக பொறுப்பேற்று ஒன்றரை மாதங்களுக்கும் மேலாகியும் விஜய் கரூருக்கு செல்லாதது குறித்து எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சித்து வந்தன.
இந்த நிலையில், கரூர் அதிமுக எம்எல்ஏ எம்.ஆர். விஜயபாஸ்கர் தனது சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, கடந்த 2ம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் பலரும் கலந்து கொண்டனர். அப்போது பேசிய அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் வரும் ஜூலை 10-ம் தேதி முதல்வர் விஜய் கரூர் வருகிறார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
அன்றைய பயணத்தின் போது, கரூரில் நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்று பல்வேறு நலத்திட்ட உதவிகளை முதல்வர் விஜய் வழங்க உள்ளார். மேலும், வேலுச்சாமிபுரம் கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்த 41 பேரின் வீடுகளுக்கும் நேரில் சென்று, அவர்களின் புகைப்படங்களுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தி, குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறவும் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. முதல்வராக பொறுப்பேற்ற பிறகு விஜய் மேற்கொள்ளும் இந்த கரூர் பயணம், அரசியல் ரீதியாகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்பட்டது.
இந்த நிலையில் தான் கரூர் செல்லும் முதல்வரின் பயணத்திட்டம் ரத்து செய்யப்பட இருப்பதாக வெளியாகி உள்ள தகவல் தமிழக வெற்றி கழகத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கடந்த நாட்களுக்கு முன்பு அதிமுகவினர் தமிழக வெற்றிக் கழகத்தில் இணையும் நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கரூர் சம்பவத்தை தொடர்புபடுத்தி சில விஷயங்களை பேசினார்.
குறிப்பாக திமுக மற்றும் காவல் துறையினரை கரூர் சம்பவத்தோடு இணைத்து பேசியது பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த நிலையில் சிபிஐ விசாரணையை பாதிக்கும் வகையில் விஜய் உள்ளிட்டோர் பேசக்கூடாது என திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில் ஜூலை 10ஆம் தேதி முதல்வர் விஜய் கரூர் செல்ல இருப்பதாகவும், கரூர் நெரிசல் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு பணியாணைகளை அவர் வழங்க உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
கரூர் சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடந்து கொண்டிருக்கும் நிலையில் ஆட்சியில் அதிகாரத்தில் இருக்கும் விஜய் பாதிக்கப்பட்ட மக்களை நேரடியாக சந்திப்பது விசாரணையை திசை திருப்பக் கூடும். எனவே சிபிஐ கருத்துக்களை கேட்டு அதற்கு பிறகு விஜய் கரூர் செல்ல அனுமதிக்க வேண்டும்” என கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கு நாளை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அசாருதீன் அமானுல்லா, ஷில் நாகு ஆகிய கொண்ட அமர்வு முன்பு நாளை விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் திமுகவின் கோரிக்கையை ஏற்றால், விஜய் கரூர் செல்ல தடை கூட விதிக்கப்படலாம் என சொல்லப்படுவதால் விஜய்யின் கரூர் பயண நிகழ்ச்சி முழுமையாக ரத்து செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக சொல்கின்றனர்.
பாதிக்கப்பட்ட 41 குடும்பங்களில் ஒருவருக்கு அரசுப் பணி கொடுப்பதாக தகவல்கள் வெளியானது. அதாவது, சி.பி.ஐ. வழக்கு நடந்து கொண்டிருக்கும்போது, அவர்கள் குடும்பத்திற்கு அரசு பணி கொடுப்பது லஞ்சம் கொடுப்பதற்கு சமமாகும். எனவே, விஜய்யின் கரூர் பயணம் ரத்தாக வாய்ப்பிருக்கிறது. அப்படியே சென்றாலும், பாதிக்கப்பட்ட குடுப்பங்களை சந்தித்து நலத்திட்டங்கள் வழங்குவதில் சட்ட சிக்கல்கள் இருக்கிறது என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்!
