நியூசிலாந்து கிரிக்கெட் அணி 18 ஆண்டுகளுக்கு பிறகு பாகிஸ்தானுக்கு சென்று விளையாட உள்ளது. அடுத்த மாதம் (செப்டம்பர்) 11-ந்தேதி பாகிஸ்தானுக்கு பயணிக்கும் டாம் லாதம் தலைமையிலான நியூசிலாந்து அணி அங்கு 3 ஒரு நாள் மற்றும் ஐந்து 20 ஓவர் போட்டிகளில் விளையாட திட்டமிட்டுள்ளது.

இந்த நிலையில் இந்த தொடர் திட்டமிட்டபடி நடக்குமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. பாகிஸ்தானின் அண்டைநாடான ஆப்கானிஸ்தானில் தலீபான் பயங்கரவாத அமைப்பினர் ஆட்சியை கைப்பற்றியுள்ளனர். இதனால் நியூசிலாந்து வீரர்களில் சிலர் பாதுகாப்பு குறித்து கவலை தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் சார்பில் பாகிஸ்தானில் உள்ள பாதுகாப்பு நிலைமை மற்றும் கொரோனா பரவல் குறித்து ஆராய பாதுகாப்பு ஆலோசகர் ரெக் டிக்காசன் வார இறுதியில்அங்கு செல்ல இருக்கிறார். பாதுகாப்பு விஷயத்தில் அவர் அளிக்கும் அறிக்கையை பொறுத்தே இந்த தொடர் குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும். இதற்கிடையே பாகிஸ்தானில் பாதுகாப்பு அச்சம் இருப்பதாக வீரர்கள் உணர்ந்தால் தாராளமாக விலகிக்கொள்ளலாம் என்று நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவுறுத்தியுள்ளது.

By admin