‘வேலியே பயிரை மேய்ந்த கதையாக 8ம் வகுப்பு மாணவிக்கு காவலாளியே பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம்தான் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
தாம்பரம் சானடோரியம் பகுதியில் உள்ள அரசு சேவை இல்லத்தில் தங்கிப் படித்த 8-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்த அரசு சேவை மைய காவலாளியை போக்சோ சட்டத்தில் போலீஸார் கைது செய்தனர். தாம்பரம் சானடோரியம் ஜட்ஜ் காலனி பகுதியில் தமிழக அரசின் சமூக நலத்துறை சார்பாக அரசு சேவை இல்லம் செயல்பட்டு வருகிறது.
இதில் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 128 மாணவிகள் தங்கி கல்லூரிகள், பள்ளிகளில் பயின்று வருகின்றனர், இந்நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 13 வயது சிறுமி கடந்த 4 நாட்களுக்கு முன்பு அரசு சேவை இல்லத்தில் சேர்ந்து குரோம்பேட்டையில் உள்ள அரசு மகளிர் பள்ளியில் 8-ம் வகுப்பு சேர்ந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் 8-ம் தேதி அதிகாலை சேவை இல்லத்தில் இருந்து எழுந்து வரும்போது மர்ம நபர் மாணவி முகத்தில் கைவைத்து அழுத்தி மயக்கம் அடைய செய்து பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. இதில் முகம் மற்றும் கால்களில் பலத்த காயம் ஏற்பட்ட தோடு கால் எலும்பு முறிவு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. அந்த மாணவி வலி தாங்க முடியாமல் சத்தம் போட்டதால் அங்கிருந்து மர்ம நபர் தப்பிச் சென்றுள்ளார். அப்போது, அருகில் இருந்த மாணவிகள் மற்றும் பாதுகாவலர்கள் அவரை மீட்டு தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் மேல் சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அவர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். சிட்லபாக்கம் போலீஸார் நடத்திய விசாரணையில் சிட்லபாக்கம் பெரியார் நகர் பகுதியை சேர்ந்த அரசு சேவை மைய காவலாளி மேத்யூ (49) என்பவர்தான் பாலியல் தொல்லை கொடுத்தவர் என்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து போக்சோவில் அவரை போலீஸார் கைது செய்தனர்.
இதுகுறித்து, அமைச்சர் கீதா ஜீவன் கூறும் போது, ‘‘குழந்தையின் தாயாரை சந்தித்தும் பேசியுள்ளேன். அந்த இல்லத்தில் 8 சிசிடிவி கேமரா பதிவு மூலம் அங்குள்ள மேத்யூ என்ற காவலரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அடுத்தகட்டமாக, உடனடியாக, 3 பெண் காவலர்களை அங்கு நியமிக்க ஆட்சியரிடம் அறிவுறுத்தியுள்ளோம். அங்குள்ள மாணவிகளிடம் நாங்கள் விசாரித்ததில், அந்த காவலர் நல்லவர், எங்கள் தந்தை மாதிரி என்றுதான் கூறுகின்றனர். பாதிக்கப்பட்ட மாணவியும் 5 நாட்கள் முன்புதான் இங்கு வந்துள்ளார்.
கூடுதலாக அந்த வளாகத்தில் சிசிடிவி வைக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளோம். பாதுகாப்பான இடம் தான். இனி பெண்களுக்கான எல்லா இல்லங்களிலும், குறிப்பாக அன்னை சத்தியா இல்லம் மற்றும் இது போன்ற சேவை இல்லங்களில், தொண்டு நிறுவனங்கள் நடத்தும் இல்லங்களிலும் இனி பெண் காவலர் மட்டுமே நியமிக்க வேண்டும் என்று முடிவெடுத்துள்ளோம்’’ இவ்வாறு அவர் தெரிவித்தார்.