ஆளுநருக்கும், அரசுக்கும் இடையே கருத்துமோதல் நிலவினால் பாதிக்கப்படுவது மக்கள்தான் என உச்சநீதிமன்றம் கூறியிருந்த நிலையில், ‘‘அரசியல் அமைப்புச் சட்டத்தின் ஆளுநருக்கு தனி அதிகாரம் உள்ளது’’ என உச்சநீதிமன்றத்தில், தமிழ்நாடு அரசு தொடுத்த வழக்கில் பதில் மனுதாக்கல் செய்துள்ளது ஆளுநர் தரப்பு.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதக்களுக்கு ஒப்புதல் அளிப்பதில், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி காலதாமதம் செய்வதாக கூறி , ஆளுநருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்கு தொடுத்தது.

இந்த வழக்கானது, கடந்த பிப்ரவரி மாதம் 10 ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழ்நாடு அரசும் ஆளுநர் தரப்பும் தனது வாதங்களை எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்யுமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து, கடந்த வாரம் தமிழ்நாடு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டதாவது, “அரசியல் அமைப்புச் சட்டப்படி, மசோதக்கள் மீது, முடிவெடுக்க ஆளுநருக்கு உத்தரவிட வேண்டும் என்றும், சட்டத்திற்கு எதிராக குடியரசுத் தலைவருக்கு எதிராக அனுப்பியது செல்லாது என உத்தரவிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. மேலும், ஆளுநர் தனது விருப்பத்தின் அடிப்படையில் அதிகாரத்தை செயல்படுத்த முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இன்று ஆளுநர் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் எழுத்துப்பூர்வ வாதங்கள் தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘‘காலாவதியான மசோதாவை, சட்டப்பேரவையில் மீண்டும் நிறைவேற்றி அனுப்பினால், உடனடியாக ஒப்புதல் தரவேண்டிய கட்டாயம் இல்லை. ஆளுநர் ஒவ்வொரு முறையும், மாநில அமைச்சரவை ஆலோசனையின்படி செயல்பட வேண்டிய அவசியமில்லை. குறிப்பிட்ட காலத்தில் , மசோதாக்களுக்கு ஒப்புதல் தர வேண்டும் என்கிற, பஞ்சாப் வழக்கின் தீர்ப்பு தனக்கு பொருந்தாது’’ எனவும் தெரிவித்துள்ளது.

மேலும், ‘‘அரசியல் சாசன பிரிவு 200ன்கீழ் ஆளுநருக்கு வழங்கப்பட்டுள்ள 4 அதிகாரங்கள் விரிவாக வழங்கப்பட்டுள்ளன. தேவைப்பட்டால், இந்த வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி விசாரிக்கலாம்’’ எனவும் ஆளுநர் தரப்பு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பானது விரைவில் உச்சநீதிமன்றத்தால் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal