சென்னை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நாளை நடக்கும் பிரபுதேவாவின் நடன நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக நடிகை ஸ்ருஷ்டி டாங்கே பரபரப்பு குற்றச்சாட்டை வைத்திருக்கிறார். இதுதான் திரையுலகில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.
நடிகை ஸ்ருஷ்டி டாங்கே தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது: பிரபுதேவாவின் நடன நிகழ்ச்சியில் என்னை பார்ப்பதற்காக காத்திருக்கும் எனது ஆதரவாளர்கள், ரசிகர்களுக்கு ஒரு விஷயத்தை சொல்கிறேன்.
நான் அந்த ஷோவில் இருந்து விலகுகிறேன். இதை சொல்வதில் எனக்கு வருத்தமாக இருக்கிறது. இந்த முடிவு எந்த வகையிலும் பிரபுதேவாவுக்கு எதிரானது அல்ல. நான் எப்போதுமே அவருடைய ரசிகை. அதே வேளையில் அந்த நிகழ்ச்சியில் காட்டப்படும் பாரபட்சங்களை என்னால் ஏற்க முடியாது. இத்தனை ஆண்டுகளாக சினிமா துறையில் இருந்து வந்த போதிலும் பாரபட்சம் காட்டுவதை நினைக்கும் போது என் மனதை உண்மையில் காயப்படுத்திவிட்டது. மேலும் உங்களுக்கான உரிமையை பெற இன்னும் போராட வேண்டிய நிலைதான் இருக்கிறது. பொய்யான வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படாத உறுதிமொழிகளும் எனக்கு அதிருப்தியை அளிக்கின்றன. இவைதான் நான் ஷோவில் இருந்து விலகுவதற்கு முக்கிய காரணங்களாக உள்ளன.
பிரபுதேவாவை கொண்டாட எனக்கு ஒரு நிகழ்ச்சியெல்லாம் தேவையில்லை. அவரை நாம் எப்போதுமே கொண்டாடுவோம். அதில் மாற்று கருத்து ஏதும் இல்லை. இந்த நிகழ்ச்சியானது எனக்கு காலாகாலத்திற்கும் நினைத்து மகிழும் வகையில் அமைந்திருக்க வேண்டும். ஆனால் துரதிருஷ்டவசமாக அதிருப்தியில் முடிகிறது.
இந்த பதிவின் மூலம் நான் அனைவரிடமும் மன்னிப்பு கேட்கவில்லை. மாறாக நான் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க மாட்டேன் என்பதை கூறிக் கொள்வதற்காக என சொல்லலாம்.
அடுத்த முறை சிறந்த ஒரு நிகழ்ச்சியில், எனக்குரிய மரியாதை கிடைக்கும் என நம்புகிறேன். இந்த நிகழ்ச்சியை எடுத்து நடத்தும் குழு, திட்டமிடலில் அதிக கவனம் செலுத்தியிருந்திருக்கலாம். இதில் கலந்து கொள்ளும் கலைஞர்களுக்கு உரிய மரியாதையை கொடுத்திருக்கலாம் என்பதுதான் எனக்கு ஒரே விருப்பமாகும். இந்த நிகழ்ச்சியில் இதுவரை நான் கலந்து கொண்டதில் நிறைய கற்றுக் கொண்டேன். இவ்வாறு ஸ்ருஷ்டி டாங்கே தெரிவித்துள்ளார்.