ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. போட்டியிடுவதாகவும், வேட்பாளராக சந்திரகுமார் களமிறங்குவதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மறைவால், ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி 5-ல் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து திருவிழா களைக்கு மாறி இருக்கிறது ஈரோடு. “ஈரோடு கிழக்கில் யார் போட்டியிடுவது என்பது குறித்து காங்கிரஸ் கட்சியுடன் கலந்தாலோசித்து முடிவு எடுக்கப்படும்” என்று முதல்வர் ஸ்டாலின் முன்பே தெரிவித்துள்ளார்.

பெரியாரின் குடும்பம் என்ற வகையில் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் குடும்பத்தினரை, முதல்வர் ஸ்டாலின் மிகுந்த வாஞ்சையுடன் அணுகுகிறார். திருமகன் ஈவெரா, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோர் வேட்பாளர் ஆக்கப்பட்ட போதும், அவர்கள் மறைவின் போதும் அது வெளிப்பட்டது.

இதனால், இளங்கோவனின் இளைய மகனான சஞ்சய் சம்பத் காங்கிரஸ் வேட்பாளராக நிறுத்தப்பட அதிக வாய்ப்புகள் உள்ளது. முதல்வர் ஸ்டாலின் மற்றும் உள்ளூர் அமைச்சர் முத்துசாமியின் விருப்பமும் இதுவாகவே உள்ளது. ஆனால், ஈவிகேஎஸ் குடும்பத்தினர், சஞ்சய் சம்பத்தை நிறுத்த ஆர்வப்படவில்லை என்கிறார்கள். அதேசமயம், “காங்கிரசிடமிருந்து ஈரோடு கிழக்கை திமுக தட்டிப்பறிக்காது” என நம்பிக்கை தெரிவித்தாலும், “ஈரோடு கிழக்கில் இந்தியா கூட்டணி வெற்றி பெறும்” என்று தான் சொல்லி இருந்தார் செல்வப்பெருந்தகை.

இந்த நி¬லையில்தான், முன்னாள் தே.மு.தி.க. எம்.எல்.ஏ., சந்திரகுமார். மாவட்ட திமுக துணைச் செயலாளர் செந்தில்குமார், இளைஞரணி அமைப்பாளர் திருவாசகம், மாநகர செயலாளர் சுப்பிரமணியம் உள்ளிட்டோர் பெயர்களும் வேட்பாளர் லிஸ்ட்டில் அடிபட்டது.

மறைந்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் குடும்பத்தில் போட்டியிட ஆர்வம் காட்டாத நிலையில், தி.மு.க. சார்பில் சந்திரகுமாரை களமிக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்திருக்கிறாராம். காரணம், இங்கு கணிசமாக உள்ள முதலியார் சமூகத்தைச் சேர்ந்தவரே நிறுத்தப்படலாம். 2011 தேர்தலில் இங்கு வெற்றி பெற்று தேமுதிக எம்எல்ஏ-வாக இருந்த சந்திரகுமார், அடுத்த தேர்தலில் (திமுக-வில் இணைந்து) தோல்வியைத் தழுவினார். 2021-ல் தொகுதி காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டதால் பறிபோன வாய்ப்பு மீண்டும் தனக்கு கிடைக்கலாம் என்ற எதிர்பார்ப்பில் இருந்த சந்திரகுமாரை முதல்வர் ‘டிக்’ செய்திருக்கிறார் என்கிறார்கள்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal