நடிகர் விஜய்யின் முதல் அரசியல் மாநில மாநாடு அனைத்து கட்சிகளுக்கு வியக்கும் வகையில் நடந்து வருகிறது. அதாவது, அனைத்து சமுதயாத் தலைவர்களின் படமும் மாநாட்டில் இடம்பெற்றிருப்பதுதான் முக்கியத்துவம் பெற்றிருக்கிறது.

இந்த நிலையில்தான், இது குறித்து சமூகவலைதளத்தில் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ‘‘என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களுக்கு, வணக்கம். பெயரைப் போல சில விசயங்களைத் திரும்பத் திரும்பச் சொல்லியே ஆக வேண்டும். அப்படித்தான் கடிதங்களில் சொன்னதையே இங்கு மீண்டும் வலியுறுத்தப்போகிறேன். காரணம்,எல்லா வகைகளிலும் எனக்கு நீங்களும் உங்கள் பாதுகாப்புமே முக்கியம். ஆகவே,மாநாட்டுப் பயணப் பாதுகாப்பில் நீங்கள் அனைவரும் மிகக் கவனமாக இருக்க வேண்டும்.

பைக்கில் வருவதை தவிர்த்தல் நன்று. உங்கள் பாதுகாப்புக் கருதியே இதைச் சொல்கிறேன். அதேபோல, வருகிற வழிகளில் பொதுமக்களுக்கோ, போக்குவரத்திற்கோ இடையூறு செய்யாமல் வர வேண்டும். போக்குவரத்து நெறிமுறைகளில் கவனம் செலுத்துவதோடு, மாநாட்டுப் பணிக்கானக் கழகத் தன்னார்வலர்கள் மற்றும் தனியார் பாதுகாவல் படைக்கு ஒத்துழைப்பு நல்குவதோடு, மாநாடு சார்ந்து காவல்துறையின் பாதுகாப்பு நெறிமுறைகளுக்கும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

உங்களின் பாதுகாப்பானப் பயணத்தை எண்ணியபடியே மாநாட்டுக்கு வருவேன்.நீங்களும் அதை மனதில் வைத்தே வாருங்கள்.அப்படித்தான் வர வேண்டும். நாளை (அக்.,27) நமது மாநாட்டில் சந்திப்போம். மாபெரும் அரசியல் சரித்திரத்தை நிகழ்த்திக் காட்டுவோம்’’ இவ்வாறு விஜய் கூறியுள்ளார்.

நடிகர் விஜய்யின் ஒவ்வொரு அறிக்கையும், மாநாட்டு வியூகமும் ஆண்டாண்டு காலமாக அரசியல் செய்துவரும் கட்சிகளையே மிரள வைத்திருக்கிறது. இதன் பின்னணியில் மும்பையைச் சேர்ந்த தேர்தல் வியூக நிபுணர் ஒருவர் இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal