‘100 நாள் வேலை திட்டத்தால் விவசாயம் விணாகி வருகிறது’ என சீமான் தொடர்ச்சியாக குற்றஞ்சாட்டி வந்தார். உண்மை நிலையும் அதுதான் என்பது ஊரறிந்த விஷயம்.
கரூர் அரவக்குறிச்சி கிராம பஞ்சாயத்துக்களில் நடைபெற்றுள்ள முறைகேடு குறித்து உரிய விசாரணைக்கு உத்தரவிடக்கோரிய வழக்கில் கருத்து தெரிவித்த நீதிபதிகள், ‘‘மகாத்மா காந்தி 100 நாள் திட்டத்தை பெரும்பாலான ஊராட்சி தலைவர்கள் கொள்ளையடிக்கும் திட்டமாக பயன் படுத்தி வருகின்றனர்’’ எனவும், மத்திய ஊழல் தடுப்பு பிரிவு இயக்குனரகம், தமிழக ஊரக வளர்ச்சித்துறை செயலாளர், கரூர் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளனர்.
அரவக்குறிச்சியை சேர்ந்த கோபிநாத் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில்,” கரூர்மாவட்டம் அரவக்குறிச்சி குறிகாரன் வலசை, கீழ்பாகம் கிராமம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமப்புற பஞ்சாயத்துகளில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் பணிகள் நடைபெறுகின்றன.
இந்தப்பணிகளை பணித்தள பொறுப்பாளராக இருந்து கண்காணிக்கும் அமுதா என்பவர், முறைகேடாக கிராமத்தில் இல்லாதவர்கள், வடமாநிலத்தவர்கள், இறந்தவர்கள் மற்றும் வெளியூரில் வசிப்பவர்களின் பெயர்களை இணைத்து அவர்களுக்கு ஊதியம் வழங்குவது போல மோசடி செய்து வருகிறார். பணித் தள பொறுப்பாளரின் மோசடிக்கு உடந்தையாக ஊராட்சி மன்ற துணைத் தலைவர் மற்றும் அவரது கணவர் ஆகியோர் உதவி செய்து வருகின்றனர். பணித் தள பொறுப்பாளர் 5 கோடி ரூபாய் வரை முறைகேடு செய்துள்ளார். மத்திய அரசின் ஜல் ஜீவன் திட்டப் பணிகள் மூலம் குடிநீர் குழாய் பதிக்கும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், குடிநீர் குழாய் இணைப்பு பணிகளுக்கு மாவட்ட ஆட்சியர் 1200 ரூபாய் கட்டணமாக விதித்துள்ள நிலையில், பொதுமக்களிடம் இருந்து 5000 ரூபாய் வரை வசூல் செய்யப்படுகிறது.
பட்டியலின மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் இதுபோன்ற முறைகேடுகள் நடைபெற்றுள்ள நிலையில், ஒன்றிய ஊழல் தடுப்பு பிரிவு மூலம் விசாரணை மேற்கொள்ள வேண்டும், உரிய விசாரணை நடைபெற்றால் மேலும் பல முறைகேடுகள் வெளியே தெரியவரும், எனவே சம்மந்தப்பட்ட நபர்கள் உரிய விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என மனு செய்திருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் சுப்ரமணியன், விக்டோரியா கவுரி ஆகியோர் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் கண்காணிக்கும் மேல்நிலை அதிகாரிகள் முதல் கீழ்நிலை அலுவலர்கள் வரை முறையாக கண்காணிப்பதும், பொறுப்பை உணர்ந்து பணிகளை செய்வதும் கிடையாது. இது அதிகாரிகளின் மோசமான நடவடிக்கை. இதுபோன்ற திட்டங்களை வைத்து ஊராட்சி தலைவர்கள் கொள்ளையடிப்பதையும், ஊழல் செய்வதையுமே நோக்கமாக கொண்டுள்ளனர். இந்த மனு குறித்து மத்திய ஊழல் தடுப்பு பிரிவு இயக்குனரகம், தமிழக ஊரக வளர்ச்சித்துறை செயலாளர், கரூர் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்தி வைத்தனர்.
பொதுவாகவே 100 நாள் வேலை திட்டத்தில் அரசு ஊழியர்களின் மனைவிகள் மற்றும் பலர் முறைகேடாக வேலைபார்த்து அரசுக்கு இழப்பை ஏற்படுத்தி வருவதாக தொடர்ச்சியாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. அந்தந்த ஒன்றிய சேர்மன்கள் மற்று பஞ்சாயத்து தலைவர்களின் தலையீட்டில் நடக்கும் முறைகேட்டிற்கு அரசாங்கம் முற்றுப்புள்ளி வைக்காவிட்டார் நீதிமன்றமாவது வைக்க வேண்டும் என்பதுதான் நடுநிலையானவர்களின் கருத்தாக உள்ளது.
ஆட்டம்… பாட்டம்… குத்தாட்டம் போட்டுவிட்டு பக்கத்து வீட்டுக் கதைகளை பேசுவதற்கு அரசாங்கம் சம்பளம் கொடுப்பதை யார் வேண்டாம் என்பார்கள்..? கொடுமை… கொடுமை…!