நடப்பு 2024-25 நிதியாண்டுக்கான முழு பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (ஜூலை 23) காலை 11 மணிக்கு மக்களவையில் தாக்கல் செய்தார். மத்திய பட்ஜெட் 2024-25 முக்கிய அம்சங்கள்:

பணவீக்கம் கட்டுக்குள் உள்ளது.

மத்திய பட்ஜெட் பெண்கள், இளைஞர்கள், விவசாயிகள், ஏழைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் 4 இலக்குகளுடன் தயாரிக்கப்பட்டுள்ளது.

4 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு திறன் பயிற்சி அளிக்கப்படும்.

வேளாண் துறை: வேளாண் துறைக்கு ரூ.1.5 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

அடுத்த 2 ஆண்டுகளில் ஒரு கோடி விவசாயிகளை இயற்கை விவசாயிகளை ஈடுபட்டுத்தத் திட்டம்.

வேளாண் துறையை டிஜிட்டல்மயமாக்க கவனம் செலுத்தப்படும்.

கடுகு, நிலக்கடலை, சூரியகாந்தி உள்ளிட்ட எண்ணெய் வித்துக்கள் உற்பத்தியை அதிகரிக்கத் திட்டம்.

கல்வி: மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் உள்நாட்டு உயர் கல்வி நிறுவனங்களில் மேற்படிப்பு பயில ரூ.10 லட்சம் கல்விக்கடன் வழங்கப்படும்.புதிதாக பணியில் சேரும் இளைஞர்களுக்கு ஒரு மாத சம்பளம் அரசு சார்பில் வழங்கப்படும். இபிஎஃப்ஓ-வில் பதிவு செய்யப்பட்டு ரூ.15 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை பெறும் இளைஞர்களுக்கு ஒரு மாதம் சம்பளம் வழங்கப்படும். இத்திட்டம் மூலம் 30 லட்சம் இளைஞர்கள் பயன்பெறுவர்.

ஆந்திர மாநில வளர்ச்சிக்காக ரூ.15,000 கோடி சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

பிஹார் மாநிலத்தில் ரூ.26,000 கோடி செலவில் 4 புதிய எக்ஸ்பிரஸ்வே சாலைகள் அமைக்கப்படும். மருத்துவ உட்கட்டமைப்பு மேம்படுத்தப்படும்.

தொழில்துறையுடன் இணைந்து பெண்களுக்கு தங்கும் விடுதிகள் அமைக்கப்படும். இவ்வாறாக அமைப்பதன் மூலம் பெண்கள் வேலைவாய்ப்பு ஊக்குவிக்கப்படும்.

முத்ரா கடன் வரம்பு ரூ.20 லட்சமாக அதிகரிக்கப்படுகிறது. முன்பு ரூ.10 லட்சம் வரம்பாக இருந்தபோது கடன் பெற்று, அதை உரிய முறையில் திருப்பிச் செலுத்தியவர்கள் புதிய வரம்பின் கீழ் பயன் பெறலாம்.

நகரங்கள், கிராமப்புறங்களில் மேலும் 3 கோடி வீடுகள் அமைக்கப்படும்.

ஊரகப் பகுதிகள் சார்ந்த திட்டங்களுக்கு ரூ.2.66 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு.

முன்னதாக, புதிய பட்ஜெட்டுட்டுக்கு முறைப்படி பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. அதனைத் தொடர்ந்து சரியாக காலை 11 மணியளவில் நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதன்மூலம் தொடர்ந்து 7-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்த முதல் நபர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்

மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் முதலில் பட்ஜெட் முன்னுரையை வாசித்தார். தொடக்கத்திலேயே மூன்றாம் முறையாக பிரதமர் மோடி தலைமையிலான அரசு ஆட்சி அமைத்து வரலாறு படைத்துள்ளதாகப் பெருமிதம் தெரிவித்ததோடு. அரசின் மீது நம்பிக்கை வைத்த மக்களுக்கு நன்றி தெரிவிப்பதாகக் கூறினார். சர்வதேசப் பொருளாதாரத்தில் நிச்சயமற்ற தன்மை நிலவு சூழலிலும் நாட்டின் பணவீக்கம் கட்டுக்குள் உள்ளது என்று அவர் தெரிவித்தார்

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal