சென்னையில் திமுக இளைஞரணியின் 45வது ஆண்டு தொடக்க விழாவில் அமைச்சரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் பேசுகையில்: ‘‘மக்களவைத் தேர்தலில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு 40க்கு 40 வெற்றியை கொடுத்த தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றி. திமுகவில் எத்தனை அணிகள் இருந்தாலும் இளைஞரணியே முதன்மையான அணி. எவ்வளவு பொறுப்புகள் வந்தாலும் இளைஞரணி செயலாளர் பொறுப்பே மனதிற்கு நெருக்கமானது.

துணை முதலமைச்சர் பொறுப்பு தொடர்பான செய்திகள் வதந்திகளே. துணை முதலமைச்சர் பொறுப்பு வழங்குவது தொடர்பான கிசுகிசுக்களை கவனித்து வருகிறேன். அனைத்து அமைச்சர்களும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு துணையாக இருப்போம் என்றார். பொய்களை மட்டுமே பேசி அரசியல் செய்து வருகிறது பாஜக. மக்களவை தேர்தலுக்காக தமிழ்நாட்டிற்கு பிரதமர் மோடி பலமுறை வந்து பிரசாரம் செய்தும் பாஜகவுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. பிரதமர் நரேந்திர மோடி 1,000 முறை தமிழ்நாடு வந்தாலும் பாஜகவுக்கு தமிழ்நாட்டில் வெற்றி கிடைக்காது. எதிர்வரும் சட்டப்பேரவை தேர்தலில் திமுக இளைஞரணியினர் கடுமையாக உழைக்க வேண்டும்.

திமுகவுக்கு பெண்களிடையே ஆதரவு அதிகரித்துள்ளது என்பதை தேர்தல் முடிவுகள் உணர்த்துகின்றன என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மகளிர் உரிமைத் தொகை திட்டம், விடியல் பயணத் திட்டம் ஆகியவை பெண்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. 2026 சட்டமன்றத் தேர்தலிலும் திமுக வெல்வது மட்டுமே இளைஞரணியினரின் இலக்காக இருக்க வேண்டும். 2026 சட்டமன்றத் தேர்தலுக்குப் பின் முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் தொடர்வதே நோக்கமாக இருக்க வேண்டும் என அமைச்சர் உதயநிதி கூறியுள்ளார்.

உதயநிதி ஸ்டாலின் இன்று துணை முதல்வராகிறார், நாளை துணை முதல்வராகிறார் என்று வந்த செய்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார். அதே போல் அமைச்சரவையிலும் இலாகாக்கள் பெரிய அளவில் மாற்றம் இருக்காது என்கிறார்கள். அப்படி மாற்றம் இருந்தால் சிறிய அளவில் இருக்கும் என்கிறார்கள் அறிவாலயம் வட்டாரத்தில் இருந்து!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal