அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டிருந்த காலத்தில் நடைபெற்ற சம்பவங்கள் குறித்து நீதிமன்ற கண்காணிப்பில் சிபிஐ விசாரணை கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உடல் நலக் குறைவு காரணமாக, கடந்த 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் 22 ஆம் தேதி இரவு 10.25 மணிக்கு அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜெயலலிதா, டிசம்பர் 5 ஆம் தேதி 11.30 மணிக்கு மரணமடைந்தார். இந்த காலகட்டத்தில் நடந்த சம்பவங்களில் நிறைய முரண்பாடுகள் இருப்பதால் உயர் நீதிமன்றத்தின் நேரடி கண்காணிப்பில் சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என, திருச்செந்தூரைச் சேர்ந்த அதிமுக உறுப்பினரும், வழக்கறிஞருமான ராம்குமார் ஆதித்தன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்த ஆறுமுகசாமி ஆணையம், புலன் விசாரணை நடத்த பரிந்துரைத்தது. ஆறுமுகசாமி ஆணைய பரிந்துரை மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மரணம் தொடர்பான ஆறுமுகசாமி ஆணைய விசாரணையில் நிறைய முரண்பாடுகள் உள்ளன. தீர்க்கப்படாத சந்தேகங்கள் உள்ளன என மனுதாரர் ராம்குமார் ஆதித்தன் தெரிவித்திருந்தார்.
இந்த மனு பொறுப்பு தலைமை நீதிபதி மகாதேவன் மற்றும் நீதிபதி முகமது சபீக் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்த போது, ஜெயலலிதா மரணம் தொடர்பாக எழுந்துள்ள சந்தேகங்கள் குறித்து புலன் விசாரணை நடத்த வேண்டும் என ஆறுமுகசாமி ஆணையம் பரிந்துரைத்த போதும், அந்த அறிக்கை மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மேலும், ஜெயலலிதா மரணம் குறித்த அறிவிப்பு வெளியாகும் முன்பே அவரது உடலை எம்பாமிங் செய்வது தொடர்பாக அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. இதையடுத்து, இந்த மனுவுக்கு இரு வாரங்களில் பதிலளிக்கும்படி, தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை தள்ளி வைத்தனர்.