திருப்பத்தூர் மாவட்டத்தில் நண்பனின் மனைவியுடன் ஏற்பட்ட கள்ளக்காதல் விவகாரத்தில் நண்பனை வெட்டி கொலை செய்த வாலிபர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

திருப்பத்தூர் மாவட்டம், குரிசிலாப்பட்டு அருகே குண்டுரெட்டியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் காளிதாஸ்(வயது 32). ஓசூரில் கட்டடத் மேஸ்த்திரியாக உள்ளார். இவரும் அதே பகுதியைச் சேர்ந்த ஓட்டுநர் சரவணன்(35) என்பவரும் நண்பர்கள் என கூறப்படுகிறது. இவர்கள் எங்கு சென்றாலும் ஒன்றாக செல்வதும், ஒன்றாக மது அருந்துவதுமாக இருந்துள்ளனர். இதற்கிடையே காளிதாஸ் மனைவி ரேவதிக்கும், சரவணனுக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதை அறிந்த காளிதாஸ் சரவணனை பலமுறை எச்சரித்துள்ளார். இதனால் இவர்களின் நட்பு பிரிந்துள்ளது.

இந்நிலையில் நேற்று இரவு வீட்டில் சரவணன், ரேவதி இருவரும் வீட்டில் ஒன்றாக இருந்துள்ளனர். அப்போது காளிதாஸ் ஓசூரில் இருந்து முன் அறிவிப்பின்றி திடீரென வீட்டிற்குள் வந்துள்ளார். அப்போது காளிதாஸ் வருவதை அறிந்த சரவணன் உடனே பீரோவின் பின்புறத்தில் மறைந்துள்ளார். மேலும் ரேவதியின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த காளிதாஸ் வீட்டை முழுவதும் சுற்றிப் பார்த்தபோது பீரோ பின்புறத்தில் சரவணன் இருப்பதை கண்டு பிடித்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த காளிதாஸ், கையில் கிடைத்த கரண்டி மற்றும் பாட்டில்களால் சரவணனை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த சரவணனை அங்கிருந்தவர்கள் மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டு சிறிது நேரத்திலேயே அவர் உயிரிழந்தார்.

இதனைத் தொடர்ந்து குரிசிலாப்பட்டு காவல் துறையினர் காளிதாசை கைது செய்தனர். நண்பன் மனைவியுடன் ஏற்பட்ட கள்ளக்காதலால் நண்பனே கொலை செய்யும் அளவிற்கு இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.‌

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal