தென் சென்னை மக்களவை தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் 2 கண்காணிப்பு கேமராக்கள் பழுதாகின. இதையடுத்து உடனடியாக அங்கு தேர்தல் ஆணைய அதிகாரிகள் மேற்பார்வையில் புதிய கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. லோக்சபா தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கிய தேர்தல் ஜூன் 1ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறுகிறது. இதுவரை 3 கட்ட தேர்தல்கள் முடிந்துள்ளன.

முதற்கட்டமாக தமிழ்நாட்டில் உள்ள 39 லோக்சபா தொகுதிகள் உள்ளிட்ட 102 இடங்களுக்கு கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. தமிழ்நாடு முழுவதும் பாராளுமன்ற தொகுதி வாரியாக வாக்குப் பெட்டிகள் அனைத்தும் ஸ்ட்ராங் ரூம் எனப்படும் ஐந்து அடுக்கு பாதுகாப்பு அறைக்குள் வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் நீலகிரி, விழுப்புரம் மற்றும் ஈரோட்டில் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் திடீரென செயலிழந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இதனையடுத்து தொழில்நுட்ப வல்லுநர்கள், பழுதை சரி செய்தனர்.

இந்நிலையில், தென்சென்னை பாராளுமன்ற தொகுதியில் பதிவான வாக்குப் பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழக வாக்கு எண்ணும் மையத்தில் திடீரென நேற்று நள்ளிரவில் 2 சிசிடிவி கேமராக்கள் செயலிழந்துள்ளன. அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தில் மொத்தம் 210 கேரமாக்கள் பொருத்தப்பட்டுள்ளன. காற்றுடன் பெய்த மழை எதிரொலியாக 210 கேமராக்களில் 2 கேமராக்கள் பழுதாயின. இதையடுத்து உடனடியாக தேர்தல் ஆணைய அதிகாரிகள் மேற்பார்வையில் பழுதான கேமராக்கள் அகற்றப்பட்டு புதிதாக 2 கேமராக்கள் பொருத்தப்பட்டன.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal