மதுரையில் இன்று காய்கறி வியாபாரிகளிடமும், காய்கறி வாங்க வந்த பொதுமக்களிடமும் அவர்களது குறைகளை கேட்டறிந்த எடப்பாடி பழனிசாமி, ‘தேர்தலுக்க பிறகு எல்லாம் சரியாகிவிடும். அ.தி.மு.க.விற்கு வாக்களியுங்கள்’ என்று காலை நேரத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் நேற்று அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி அக்கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்தார். இரவு மதுரை ‘ரிங்’ ரோட்டில் உள்ள தனியார் ஹோட்டலில் தங்கினார். இன்று (செவ்வாய்க் கிழமை) அதிகாலை 7.30 மணியளவில் மதுரை மாட்டுத்தாவணி ஒருங்கிணைந்த காய்கறி மார்க்கெட்டில் மதுரை அதிமுக வேட்பாளர் மருத்துவர் சரவணனை ஆதரித்து, தரைக்கடை வியாபாரிகள், மாநகராட்சி கடை வியாபாரிகளிடம் நடந்து சென்று ஆதரவு திரட்டினார்.

அப்போது வியாபாரிகளிடம், காய்கறி வாங்க வந்த பொது மக்களிடம் இன்றைய காய்கறி விலைகள் நிலவரம் கேட்டறிந்தார். அதேபோல் வியாபாரிகளிடம் காய்கறிகள் எங்கிருந்து வருகின்றன? லாபம் கிடைக்கிறதா? மாட்டுத்தாவணி மார்க்கெட்டுக்கு தேவையான வசதிகள் என்ன? என்பன போன்ற பல்வேறு கேள்விகளை பழனிசாமி கேட்டார்.

அதற்கு அவர்கள், “மார்க்கெட்டை இதுவரை எந்த ஒரு அமைச்சரோ, எம்பி, மேயர், கவுன்னசிலர்களோ எட்டடிப் பார்க்கவில்லை. நீங்களாவது நேரடியாக வந்து எங்கள் குறையைக் கேட்டது மனநிறைவாக இருக்கிறது. தேர்தலுக்குப் பிறகு எங்களை மறந்துவிடாமல் எங்கள் கோரிக்கையை நிறைவேற்றித் தாருங்கள்.

காய்கறி வியாபாரம் முன்போல் இல்லை. தக்காளியை ஓசூர், கர்நாடகாவில் இருந்து கொண்டு வந்து விற்பதால் கிலோ ரூ.25 முதல் ரூ.30 வரை விற்க வேண்டிய உள்ளது. இந்த விலைக்கு மக்கள் வாங்க மறுக்கிறார்கள். அதனால், வாங்கிய தக்காளியை இரண்டு நாளைக்கு மேல் வைத்திருக்க முடியவில்லை. அதற்குள் அழுகி நஷ்டம் ஏற்படுகிறது. காய்கறி வியாபாரம் பார்க்க முடியவில்லை. தெரிந்த தொழிலை விடவும் மனமில்லாமல் கந்து வட்டியில் சிக்கி அவர்களுக்கு சம்பாதிக்கவே இந்த தொழிலில் தொடர்ந்து இருக்க வேண்டிய நிலை உள்ளது.

முன்பு தரைக்கடை வாடகைக்கு 2,000 பேர் வியாபாரம் செய்தனர். ஆனால், எங்களில் 1,000 பேரை அப்புறப்படுத்திவிட்டனர். இப்போது எங்களையும் கடை கட்டித்தருகிறோம் என்று கூறி அப்புறப்படுத்தப் பார்க்கிறார்கள். அரசாங்கத்திடம் பேசி எங்களை இங்கேயே வியாபாரம் செய்ய அனுமதிக்க வேண்டும். விலைவாசியை கட்டுப்படுத்தினால்தான் மக்கள் முன்போல் காய்கறி வாங்க வருவார்கள். நாங்களும் சம்பாதிக்க முடியும்.

மார்க்கெட்டில் காய்கறி வாங்க வருவோர், வியாபாரிகள் வாகனங்களை நிறுத்த இடவசதியில்லை. ஆனால் மாநகராட்சி நுழைவுக் கட்டணம் மட்டும் வசூல் செய்கிறது. பொதுமக்கள், வியாபாரிகளுக்கு கழிப்பிட வசதியில்லை. குடிநீர் வசதியில்லை. அடிப்படை வசதிகளை செய்து கொடுக்காமல் மாநகராட்சி வாடகையை மட்டும் வசூல் செய்கிறார்கள்” என்றனர்.

அதற்கு பழனிசாமி, “நீங்கள் எங்களுக்கு வாக்களியுங்கள், எல்லாம் இந்தத் தேர்தலுக்கு பிறகு சரியாகிவிடும், ’’ என்றார். 20-க்கும் மேற்பட்ட வியாபாரிகளை சந்தித்து அவர்கள் குறைகளையும், எதிர்பார்ப்புகளை கேட்டறிந்த அவர், அருகில் இருந்த முன்னாள் அமைச்சர் ஆர்பி.உதயகுமார், செல்லூர் கே.ராஜூ, அமைப்புச் செயலாளர் விவி.ராஜன் செல்லப்பாவிடம் கூறி, தேர்தலுக்குப் பிறகு இந்த குறைகளைப் போக்க என் கவனத்துக்கு கொண்டு வாருங்கள்” என்றார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal