திருச்சி மலைக்கோட்டை முதல் காந்தி மார்க்கெட் வரை ரோடு ஷோ நடத்த பாஜகவுக்கு போலீஸ் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் திமுக, அதிமுக தலைமையில் இரு கூட்டணிகள் களத்தில் உள்ள நிலையில், பாஜக தனி கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. தமிழ்நாட்டில் 19 தொகுதிகளில் பாஜக நேரடியாக போட்டியிடுகிறது. மேலும் 4 தொகுதிகளில் கூட்டணி கட்சிகள் தாமரை சின்னத்தில் போட்டியிடுகின்றன. மீதமுள்ள 16 தொகுதிகளில் பாஜக கூட்டணி கட்சி வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

இந்நிலையில் தமிழ்நாட்டில் பாஜக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி பிரசாரம் மேற்கொண்டார். மேலும் பாஜக தேசிய தலைவர்களும் அடிக்கடி தமிழகம் வந்து கொண்டிருக்கின்றனர். அந்த வரிசையில் தமிழகத்தில் பாஜக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை மேற்கொள்வதற்காக பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா இன்று இரவு திருச்சி வரவுள்ள நிலையில், திருச்சி காந்தி மார்க்கெட் முதல் மலைக்கோட்டை வரை ரோடு ஷோவுக்கு பாஜக தரப்பில் அனுமதி கோரியிருந்தனர்.

இந்நிலையில், திருச்சியில் பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டாவின் வாகன பேரணிக்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. இந்நிலையில் திருச்சி காந்தி மார்க்கெட் முதல் மலைக்கோட்டை வரை போக்குவரத்து நெரிசல் காரணமாக வாகன பேரணிக்கு அனுமதி இல்லை என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal