அமைச்சர் எ.வ.வேலு மற்றும் அவரது மகனுக்கு சொந்தமான இடங்களில் நான்காவது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில்தான் சோதனையின் முடிவில் அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு எ.வ.வேலுவை அழைத்து விசாரணை நடத்த, அதிகாரிகள் திட்டமிட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுவின் வீடு மற்றும் அவருக்கு தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. சென்னை, திருவண்ணாமலை உள்பட எ.வ.வேலுவுக்கு சொந்தமான பல்வேறு இடங்களில் சி.ஆர்.பி.எப் வீரர்கள் பாதுகாப்புடன் வருமானத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். திருவண்ணாமலையில் எ.வ.வேலுவுக்கு சொந்தமான கல்லூரியிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

இந்த நிலையில், அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் 4வது நாளாக இன்றும் தொடர்ந்து வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. அமைச்சர் எ.வ.வேலுவின் மகனுடைய வீட்டிலும் சோதனை நடைபெற்றது.

இதுவரை நடைபெற்ற சோதனையில் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது குறித்த தகவலை வருமான வரித்துறை தரப்பில் வெளியிடவில்லை. சோதனையின் முடிவில் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதா? போன்ற தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்த சோதனையானது நாளை வரை நீடிக்க வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும், வரி ஏய்ப்பு புகாரிலும் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. கடந்த 2021 சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பாகவும் அமைச்சர் எ.வ.வேலுவுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரி சோதனை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal