சென்னையில் நேற்று நடந்த மகளிர் உரிமை மாநாட்டில், ‘லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வந்திருக்கிறார்’ என உதயநிதியை பார்த்து கனிமொழி பேசியதும், மத்தியில் ஆளும் பி.ஜே.பி.யின் தவறுகளை ஆணித்தரமாக கனிமொழி சுட்டிக்காட்டி பேசியதுதான் சோனியா, மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்களை கவர்ந்திருக்கிறது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மகளிர் உரிமை மாநாடு சென்னை ஒய்எம்சிஏ நந்தனம் மைதானத்தில் தொடங்கி தற்போது நடைபெற்று வருகிறது.

இந்த மகளிர் உரிமை மாநாட்டில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி, தேசியவாத காங்கிரஸ் கட்சி செயல் தலைவர் சுப்ரியா சுலே, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர் ஆனி ராஜா, ஆம் ஆத்மி கட்சியின் தேசிய நிர்வாக குழு உறுப்பின ராக்கி பிட்லன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக சென்னை வந்தடைந்த காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி மற்றும் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி உள்ளிட்டோரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்றார். மாநாட்டில் கலந்துகொள்ள வருகை தந்தவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நினைவு பரிசுகளை வழங்கினார்.

இந்த மாநாட்டில் மாநிலம் முழுவதிலும் இருந்து திமுகவை சேர்ந்த சுமார் 25 ஆயிரம் மகளிர் கலந்து கொண்டுள்ளனர். மாநாட்டில் பேசிய திமுக எம்பி கனிமொழி,

“மகளிர் உரிமை மாநாட்டிற்கு நூற்றாண்டு கால வரலாறு உண்டு. இந்தியாவில் முதல்முறையாக காவல்துறையில் தமிழ்நாட்டில் தான் பெண்களுக்கு வாய்ப்பு தரப்பட்டது.

படிக்கும் ஆர்வமுள்ள பெண்களுக்கு கைதூக்கிவிட அவர்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்பட்டு வருகிறது. மகளிர் முன்னேற்றத்திற்காக உரிமை தொகை வழங்கப்படுகிறது’’ என பேசியவர், தமிழகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினின் ‘திராவிட மாடல்’ ஆட்சியின் சிறப்பம்சங்களை எடுத்துரைத்தார்.

மேலும் பேசிய கனிமொழி எம்.பி.,, ‘‘ பாஜக ஆட்சியில் எந்த பெண்களுக்கும் பாதுகாப்பு இல்லை. அதற்கு மணிப்பூர் உதாரணம். இதே பாஜக குஜராத்தில் செய்த அட்டூழியங்களாலும் பாதிக்கப்பட்டது பெண்கள் தான். ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் குடியரசு தலைவரே அவமதிக்கப்படுகிறார்.

புதுச்சேரியில் பட்டியலின பெண் என்பதால் அமைச்சரே ராஜினாமா செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். 11 பெண் மேயர்களை கொண்ட மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது. பாஜக கொண்டு வந்துள்ள மகளிர் இட ஒதுக்கீடு 50 ஆண்டுகள் ஆனாலும் நடைமுறைக்கு வராது. தமிழ்நாட்டில் தான் அதிகப்படியான பெண்கள் வேலைக்கு செல்கிறார்கள்” என பி.ஜே.பி.யின் தவறுகளை ஆணித்தரமாக பட்டியலிட்டுப் பேசினோர் கனிமொழி.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal