அ.தி.மு.க.வுக்கும் பி.ஜே.பி.க்கும் ‘ஒட்டுமில்லை… உறவுமில்லை’ என எடப்பாடி பழனிசாமி விலகியதால், இரட்டை இலை சின்னம் முடங்க வாய்ப்புள்ளது என டி.டி.வி.தினகரன் எச்சரித்திருக்கிறார்.

மதுரை கோச்சடை பகுதியில் உள்ள தனியார் விடுதியில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மகாத்மா காந்தியின் திருவுருவ உருவப்படத்திற்கும், பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு அவரது உருவப்படத்திற்கும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது, 2014ல் திமுக தோற்ற போது ஸ்டாலின் ஏன் தனக்கு தானே தண்டனை கொடுத்து கொள்ளவில்லை. தற்போது தேர்தல் வருவதால் மாவட்ட செயலாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கிறார். 2019ல் பாஜகவை காட்டி மதக்கலவரம், இனக்கலவரம் எனக்கூறி ஸ்டாலின் வாக்குகளை பெற்றார். ஆனால் ஸ்டாலின் கூறியது போல எதுவுமே பாதிப்பு ஏற்படவில்லை.

ஜெயலலிதாவின் பெயரை சொல்லி பிழைப்பு நடத்தினார்கள். அம்மாவின் படத்தை கட்சி நிகழ்ச்சிகளில் விளம்பரப் பலகையில் போடாமல் விட்டுள்ளனர். 2017ல் அதிமுக ஆட்சியில் இல்லாமல் இருந்திருக்க வேண்டும். ஆனால் பாஜக உதவியால் தான் பழனிச்சாமி ஆட்சி நடத்தினார். அமமுகவுக்கு ஏற்படும் பின்னடைவுகளை நான் பின்னடைவாக பார்க்கவில்லை. ஒரு அனுபவமாகத்தான் எடுத்து கொண்டுள்ளேன். பாஜகவை விட்டு விலகினால் எடப்பாடி பழனிச்சாமி அதிமுக சின்னாபின்னமாகி விடும். பழனிச்சாமி தன் மீது கொள்ளிக்கட்டையை வைத்தது போல ஆகிவிடும். பாஜகவை விட்டு விலகியதற்கான தண்டனையை பழனிச்சாமி அனுபவிப்பார்.

சசிகலா யாருக்கும் பயந்து வீட்டிற்குள் இருப்பவர் இல்லை. அவர் சட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார். அதிமுகவில் இன்றும் எங்கள் ஸ்லீப்பர் செல்கள் உள்ளனர். அவர்கள் தேவையான நேரத்தில் தேவையான தகவல்களை தருவார்கள். பாஜகவை விட்டு வெளியே வந்த பழனிச்சாமி மெகா கூட்டணி யாரோடு அமைக்க போகிறார்? இரட்டை இலை முடக்கமாக வாய்ப்புள்ளது. அதிமுக வருங்காலத்தில் நெல்லிக்காய் மூட்டை போல சிதற போகிறது என்றார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal