அதிமுக கூட்டணியில் பாஜக இருந்தாலும் அ.தி.மு.க.வின் தலைமைக்கும் அண்ணாமலைக்கும் ஏழாம் பொருத்தமாக இருக்கிறது. இந்த நிலையில்தான் ‘அண்ணாமலையை மாற்ற வேண்டும்’ என்ற அ.தி.மு.க.வின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டருக்கிறது.

உள்துறை அமைச்சர் அமித்ஷா நேரம் ஒதுக்காத நிலையில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் மற்றும் ஜெ.பி.நட்டாவை அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, சி.வி.சண்முகம், நத்தம் விஸ்வநாதன், கே.பி.முனுசாமி ஆகியோர் சந்தித்தனர். அப்போது அண்ணாமலை தொடர்பாக புகார் அளித்ததாக கூறப்படுகிறது.

தமிழகத்தில் அதிரடி அரசியல் செய்து வருகிறார் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை. அதிமுக கூட்டணியில் பாஜக இருந்தாலும் இரண்டு தரப்புக்கும் இடையே முட்டல் மோதல் நாளுக்கு நாள் உச்சம் பெற்று வருகிறது. இந்நிலையில் மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணா குறித்து அண்ணாமலை பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு அதிமுக தரப்பில் பதிலடி கொடுக்கப்பட்டதை அடுத்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை என்ற அறிவிப்பை வெளியிட்டார்.

இதுதொடர்பாக சமீபத்தில் விளக்கம் அளித்த தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை அதிமுக- பாஜக இடையே எந்த பிரச்சினை இருப்பதாக தெரியவில்லை என்றார். இந்நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர்களான எஸ்.பி. வேலுமணி, தங்கமணி, சி.வி.சண்முகம், கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன் திடீரென டெல்லி சென்றனர். மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க உள்ளதாகவும் தகவல் வெளியானது.

ஆனால், உள்துறை அமைச்சர் அமித்ஷா நேரம் ஒதுக்காத நிலையில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் மற்றும் ஜெ.பி.நட்டாவை அதிமுகவினர் சந்தித்தனர். அப்போது தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையை மாற்ற வேண்டும். அவரை மாற்றினால் மட்டுமே கூட்டணியை தொடர்வது குறித்து முடிவு எடுக்கப்படும் கூறியதாக சொல்லப்படுகிறது.

ஆனால், அதிமுக மூத்த தலைவர்கள் வைத்த கோரிக்கையை பாஜக தேசிய தலைவர்கள் பெரிதாக எடுத்துக்கொள்ளாததால் ஏமாற்றத்துடன் திரும்பியதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜெ.பி.நட்டாவுடன் சந்திப்பு வெறும் 10 நிமிடங்கள் மட்டுமே நீடித்ததாக கூறப்படுகிறது.

தமிழக பா.ஜ.க. தலைவர் பதவியிலிருந்து அண்ணாமலையை மாற்றுவதற்கு பி.ஜே.பி. தலைமை பிடிகொடுக்காத நிலையில், அடுத்த கட்ட ஆலோசனைக்கு தயாராகி வருகிறார் எடப்பாடி பழனிசாமி!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal