பாராளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் பா.ஜனதா தலைமையிலான கூட்டணியும், எதிர்க்கட்சிகள் கூட்டணியும் அடுத்தடுத்து ஆலோசனை கூட்டங்கள் நடத்தி உள்ளன. இந்த பரபரப்பான சூழ்நிலையில் பாராளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. மணிப்பூர் கலவரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக 15-க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தனர்.

குறிப்பாக அவையின் மற்ற அலுவல்களை ஒத்திவைத்துவிட்டு மணிப்பூர் கலவரம் தொடர்பாக விவாதிக்கவேண்டும் என்றும், பெண்கள் மீதான கொடூர தாக்குதல் தொடர்பாக பிரதமர் பாராளுமன்றத்தில் பேசவேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி அமளியில் ஈடுபட்டன. இதன் காரணமாக அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன. தொடர்ந்து அமளி நீடித்ததால் இரு அவைகளும் அடுத்தடுத்து ஒத்திவைக்கப்பட்டு, பின்னர் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

எதிர்க்கட்சிகள் முன்வைத்த விவகாரங்கள் தொடர்பாக விவாதிக்க தயாராக இருக்கிறோம் என்ற பிறகும், எதிர்க்கட்சிகளின் அணுகுமுறையை பார்க்கும்போது, அவர்கள் பாராளுமன்ற கூட்டத்த நடத்த விடக்கூடாது என்பதில் என்பதில் தெளிவாக இருப்பதை புரிந்து கொள்ள முடிகிறது என பியூஷ் கோயல் தெரிவித்தார். எதிர்க்கட்சிகள் மணிப்பூர் விவகாரத்தை அரசியலாக பார்ப்பதாகவும், விவாதிக்க தயாராக இருக்கும்போது, எதிர்க்கட்சிகள் அதில் இருந்து விலகுவதாகவும் மத்திய மந்திரி அனுராக் தாகூர் தெரிவித்துள்ளார்.

மணிப்பூர் விவகாரம் தொடர்பாக இரு அவைகளிலும் விவாதிக்க நாங்கள் தயாராக உள்ளோம் என்பதை ஏற்கனவெ தெளிவுபடுத்திவிட்டதாக பாராளுமன்ற விவகாரத்துறை மந்திரி பிரகலாத் ஜோஷி தெரிவித்தார். மேலும், மணிப்பூர் விவகாரம் உணர்வுபூர்வமான பிரச்சினை, விவாதத்திற்கு உள்துறை மந்திரி விரிவாக பதில் அளிப்பார். விவாத தேதியை சபாநாயகர் முடிவு செய்யட்டும் என்றும் பிரகலாத் ஜோஷி கூறினார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal