கொடநாடு விவகாரத்தை ஆளும் கட்சியான தி.மு.க.வே அவ்வளவாக கண்டுகொள்ளாத நிலையில், ஓ.பி.எஸ். தரப்பு தற்போது கையில் எடுத்திருக்கிறது.

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் விரைந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாநிலம் தழுவிய அளவில் வரும் ஆகஸ்ட் 1-ல் போராட்டம் நடைபெறும் என ஓபிஎஸ் தரப்பு அறிவித்துள்ளது.

முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வம் தரப்பினர் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:- ‘‘கோடநாடு கொலை கொள்ளை விவகாரத்தில் விரைந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆகஸ்ட் 1 ஆம் தேதி மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

கொடநாடு விவகாரத்தில் முதல்வர் மு.க ஸ்டாலின் தனது வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. கோடநாடு வழக்கு விசாரணை கிடப்பில் உள்ளது . கோடநாடு வழக்கில் உரிய விசாரணை தேவை. விரிவான விசரணை நடத்தினால்தான் குற்றவாளிகள் யார் என்று தெரியும்’’ இவ்வாறு அவர்கள் பேசினர்.

இந்திய தேர்தல் ஆணையம் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி என அங்கிகீரித்திருக்கும் நிலையில்தான், ஓ.பி.எஸ். தரப்பினர் கடைசி ஆயுதமாக ‘கொடநாடு’ விவகாரத்தை கையில் எடுத்துள்ளனர்.

இதற்கிடையே இது தொடர்பாக நீண்ட விளக்கம் கொடுத்த ஓ.பி.எஸ். ஆதரவாளர் வைத்திலிங்கம், ‘‘தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கொடநாடு விவகாரத்தில் நடவடிக்கை எடுப்பேன் என்று கூறியிருந்தார். ஆனால், கொடநாடு விவகாரத்தை தி.மு.க. கிடப்பில் போட்டுவிட்டது’’ என்று பேசியதுதான், ‘‘தி.மு.க.வின் ‘பி’ டீம் ஓ.பி.எஸ். தரப்பினர்’’ என்பது ஊர்ஜிதமாகியிருக்கிறது என்கின்றனர் எடப்பாடி தரப்பினர்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal