தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு அரசியல் தெரியாது என்று அ.தி.மு.க, தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் பொதுவான விமர்சனத்தை வைத்தன. ஆனால், இன்றைக்கு பொன்விழா கண்ட கட்சியும், வெள்ளி விழா கண்ட கட்சியும் வியக்கும் அளவிற்கு ‘அரசியல்’ செய்து வருகிறார் முதல்வர் விஜய்!
அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ஏற்கனவே நான்கு பேர் ராஜினாமா செய்துவிட்டு த.வெ.க.வில் இணைந்த நிலையில் நேற்று புதுக்கோட்டை விஜயபாஸ்கர் ராஜினாமா செய்திருக்கிறார். அடுத்தடுத்து இன்னும் இரண்டு அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்யப் போவதாக தகவல்கள் வெளியாகிருக்கிறது.
அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு ‘ஸ்கெட்ச்’ போட்ட பனையூர், அடுத்து உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட்ட இரண்டு எம்.எல்.ஏ.க்களுக்கும் ஸ்ட்கெட் போட்டிருப்பதுதான் அரசியல் வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. இது பற்றி தமிழக அரசியல் பார்வையாளர்களிடம் பேசினோம்.
‘‘ விஜய்யால் இருபெரும் திராவிட கட்சிகளை வென்று விட முடியுமா? என 2024 அக்டோபர் மாதம் விஜய் கட்சி ஆரம்பித்தபோது பலரும் பேசினார்கள். 1967, 1977 போல தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நிச்சயம் என விஜய் சொன்னபோது பலரும் கேலி சிரிப்பு சிரித்தது என்னவோ உண்மைதான். அது மட்டும் அல்லாமல் தேர்தல் முடிவுகளுக்கு முன் உத்தேச அமைச்சரவை பட்டியல் என சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்ட ஒரு பட்டியலை பார்த்து பலரும் நமட்டு சிரிப்பு சிரித்ததை மறந்து விட முடியாது.
ஆனால் 2026 தேர்தல் களம் அப்படியே மாறியது. தேர்தல் முடிவுகள் வெளிவர தொடங்கிய போது திமுக முன்னிலையிலும் தவெக மூன்றாவது இடத்திலும் இருந்தது. ஆனால் நேரம் செல்ல செல்ல தவெக முதலிடத்திலும், திமுக இரண்டாவது இடத்திலும் இருந்தது. வேறு எந்த கட்சிக்கும் தமிழக மக்கள் இடம் கொடுக்கவில்லை. தேர்தல் முடிவுகளின் போது 108 தொகுதிகளை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக தமிழக வெற்றி கழகம் உருவெடுத்தது.
108 தொகுதிகளை வைத்துவிட்டு வைத்துக்கொண்டு ஆட்சி அமைக்க முடியுமா என பேசியபோது காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகியவை தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு தந்தன. தொடர்ந்து சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்த போது எதிர்பாராத விதமாக அதிமுக எம்எல்ஏக்கள் விஜய்க்கு ஆதரவாக வாக்களித்தனர். பிறகு தகுதி நீக்கம் உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு பிறகு நான்கு பேர் ராஜினாமா செய்துவிட்டு தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர்.
இந்த நிலையில் அதிமுகவை அடித்து துவம்சம் செய்யும் நோக்கில் தான் விஜய் செயல்படுகிறார் என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. குதிரை பேர குற்றச்சாட்டுக்கு ஆதாரங்கள் இல்லை என உயர்நீதிமன்றம் கூறிவிட்ட நிலையில், ஐந்து தொகுதிகளில் இடைத்தேர்தல் நடப்பது உறுதியாகி இருக்கிறது. கூடுதலாக நேற்று அதிமுகவின் விஜயபாஸ்கர் தனது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். வரும் சனிக்கிழமை தமிழக வெற்றிக்கழகத்தில் அவர் இணையலாம் என சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் தமிழகத்தில் பரபரப்பை கூட்டும் வகையில் மேலும் மூன்று பேர் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்யப் போகிறார்களாம். அதில் ஒருவர் அதிமுக எம்எல்ஏ தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு தமிழக வெற்றி கழகத்தில் இணையப் போகிறார். மற்ற இரண்டு பேர் திமுக கூட்டணியில் இருக்கும் கட்சியை சேர்ந்தவர்கள் திமுக சின்னமான உதயசூரியனில் போட்டியிட்டதால் அதிருப்தியில் இருக்கும் அந்த கட்சியின் தலைமை அவர்கள் இருவரையும் ராஜினாமா செய்ய சொல்லி இருக்கிறது.
பதவியை ராஜினாமா செய்து விட்டு தங்களது கட்சியின் சின்னத்திலேயே வரும் இடைத்தேர்தலில் போட்டியிடப் போகிறார்களாம். அதற்கான செலவுகளை தமிழக வெற்றி கழகம் கவனித்துக் கொள்ளும் என்கின்றனர். இது தொடர்பாக இரு கட்சி தலைமையும் பேசி முடிவு செய்துவிட்டதாம். இன்று அல்லது நாளைக்குள் அந்த இரண்டு எம்எல்ஏக்களும் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்வார்கள். தவிர தமிழகத்தில் குறைந்தது பத்து தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடக்க வாய்ப்பிருக்கிறது’’ என்கின்றனர்.
அ.தி.மு.க.வைத் தொடர்ந்து உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட எம்.எல்.ஏ.க்களையும் ராஜினாமா செய்ய வைத்து தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தவிருக்கிறது தமிழக வெற்றிக்கழகம் என்கிறார்கள்!
