“தவெக பல்வேறு தேர்தல் வாக்குறுதிகளை அளித்தது. அவற்றை நிறைவேற்ற முடியாத சூழல் உள்ளது. ஆளுங்கட்சி வெளியிட்ட வெள்ளை அறிக்கையில் ரூ.13.18 லட்சம் கோடி கடன் உள்ளதாக கூறப்பபட்டுள்ளது. இது இதுவரை இல்லாத கடன் அளவாகும்” என மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ எம்.பி தெரிவித்துள்ளார்.
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரத்தில் உள்ள திருமண மண்டபத்தில் இன்று (ஜூன் 17) நடந்த கிருஷ்ணராயபரம் மதிமுக பேரூர் செயலாளர் வெங்கடாசலம் இல்லத் திருமண வரவேற்பு விழாவில் மதிமுக முதன்மைச் செயலாளரும், திருச்சி எம்.பி.யுமான துரை வைகோ பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “தூத்துக்குடி ஸ்டெர்லைட் நச்சு ஆலையை மூடுவதற்கு மதிமுக ஆற்றிய களப்பணி அனைவருக்கும் தெரியும். துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 13 பேர் உயிரிழந்த நிலையில், உயர் நீதிமன்ற உத்தரவின்பேரில் ஆலை மூடப்பட்டது.
மீண்டும் ஆலையை திறப்பதற்கான முயற்சிகள் நடைபெறுவதாக தகவல் வந்தது. அதற்கு தமிழக அரசு ஆதரவு அளிக்கக் கூடாது என மனு அளிக்க முதல்வரை சந்திக்க மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அனுமதி கேட்டிருந்தார். அதனைத் தொடர்ந்து அமைச்சர் ஆதவ்அர்ஜுனா வைகோவை அவரது இல்லத்தில் சந்தித்தார். இது தொடர்பாக முதல்வரை வைகோ சந்திக்கிறார்.
மதிமுகவின் அரசியல் நிலைப்பாடு குறித்து ஜூன் 27-ம் தேதி நடைபெறும் கட்சி பொதுக்குழுவில் நிர்வாகிகளின் கருத்தை அறிந்து தலைமை முடிவு செய்யும். தனிப்பட்ட முறையில் நான் தெரிவிக்க முடியாது.
தவெக பல்வேறு தேர்தல் வாக்குறுதிகளை அளித்தது. அவற்றை நிறைவேற்ற முடியாத சூழல் உள்ளது. ஆளுங்கட்சி வெளியிட்ட வெள்ளை அறிக்கையில் ரூ.13.18 லட்சம் கோடி கடன் உள்ளதாக கூறப்பபட்டுள்ளது. இது இதுவரை இல்லாத கடன் அளவாகும். விவசாயக் கடன் தள்ளுபடி ரூ.50,000-ல் இருந்து ரூ.75,000 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. காலப்போக்கில் முழுமையாக தள்ளுப்படி செய்யப்படும் என எதிர்பார்க்கலாம்.
நாட்டில் அதிகம் பாதிக்கப்படுவது விவசாயிகள்தான். விவசாயப் பொருட்களுக்கு உரிய விலையின்றி நஷ்டம் அடைகின்றனர். விவசாய கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்யவேண்டும் என்பது நியாயமான கோரிக்கை.
பிற கட்சி எம்எல்ஏக்கள் ராஜினாமா குறித்து நான் கருத்து சொல்வது சரியாக இருக்காது. இயக்க தலைமை மீது அதிருப்தி, கொள்கைக்கு புறம்பாக அவர்கள் செயல்படுவதாக கருத்து ஏற்படும்போது, ராஜினாமா செய்கின்றனர். இதுபோன்ற சம்பவங்கள் ஏற்கெனவே நடந்துள்ளன. ஒரு கட்சியில் இருந்துகொண்டே அதற்கு எதிராக வாக்களிப்பதைதான் தவறு என கூறமுடியும்.
பெண்கள், குழந்தைகள் மீதான குற்றங்கள் நடக்கவே கூடாது என்பதுதான் நம் கருத்து. ஆனாலும் விரும்பத்தகாத முறையில் நடந்த பாலியல் குற்றங்களில் தொய்வின்றி தவெக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. 24 மணி நேரத்தில் குற்றவாளி கைது, எப்ஐஆர் பதிவு செய்தல் ஆகியவை மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அண்மையில் நடந்த குற்றங்களில் ஒரு சில குற்றங்களில் வெளிமாநில தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளதால் காவல் துறை அவர்களை கண்காணிக்கவேண்டும். அவர்களை பணிக்கு அமர்த்தும் உரிமையாளர்கள் பதிவேட்டை பராமரிக்க வேண்டும். அதில் அவர்கள் பெயர், முகவரி, குற்றப் பின்னணி குறித்த தகவல்களை இடம்பெற வேண்டும். சிங்கப்பெண் போன்ற திட்டங்கள் வரவேற்கக்கூடியது.
திருச்சி கரூர் தேசிய நெடுஞ்சாலையில் திருச்சியில் இருந்து கரூர் வரை சாலை குறுகலாக இருப்பதால் அதிக விபத்துகள் நடைபெறுகின்றன. இதுகுறித்து மத்திய அரசிடம் கோரிக்கை வைத்தப்போது திருச்சியில் இருந்து கரூர் வழியாக கோவைக்கு பசுமை வழிச்சாலை அமைக்கப்பட உள்ளதாக தெரிவித்தனர்.
இத்திட்டத்துக்கு நில ஆர்ஜிதம் செய்து பணிகள் தொடங்க 10 ஆண்டுகளாகிவிடும். பெருகிவரும் போக்குவரத்து காரணமாக 10 ஆண்டுகள் வரை இந்தச் சாலை தாங்காது. எனவே ஏற்கெனவே நில ஆர்ஜிதம் செய்யப்பட்டுள்ள, தற்போது பயன்பாட்டில் உள்ள சாலையையே அகலப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும். இது தொடர்பாக தேசிய நெடுஞ்சாலை ஆணைய அலுவலர்களை சந்திக்க உள்ளேன்” என்று அவர் கூறினார்.
