தமிழகத்தில் அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வரும்; எடப்பாடி பழனிசாமி நல்லாட்சி தருவார் என்று தெரிவித்துள்ள அக்கட்சியின் மூத்த தலைவரும் மாநிலங்களவை எம்.பி.யுமான தம்பிதுரை, இது தொடர்பாக கட்சி பல்வேறு கட்ட ஆலோசனைகளில் ஈடுபட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள அவர், “ஏராளமான ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன. இப்போது என்னால் எதையும் உறுதியாக சொல்ல இயலாது. அனைத்தும் உரிய நேரத்தில் நடக்கும். நல்லதே நடக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். எனது கட்சி, எனது தலைவர் மீண்டும் (ஆட்சிக்கு) வருவார்”
திமுகவுடன் அதிமுக கூட்டணி அமைக்க இருக்கிறதா என்ற கேள்விக்கு, ”இல்லை, இல்லை. இப்போதைக்கு நான் என்ன சொல்ல முடியும் என்றால், மக்களின் உணர்வுப்பூர்வமான ஆதரவு அதிமுகவுக்கு இருக்கிறது. அதிமுக ஆட்சிக்கு வர வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள். எங்கள் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மக்களைச் சந்திக்கும்போதெல்லாம், அவர்கள் தங்கள் உணர்வுப்பூர்வ ஆதரவை வெளிப்படுத்துகிறார்கள். எனவே, கடவுளின் அருளால் அது உரிய காலத்தில் நடக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்.
அதிமுக-திமுக இடையே பேச்சுவார்த்தை நடைபெறுவதாகக் கூறப்படுவது உண்மையா என்ற கேள்விக்கு, அது குறித்து தலைவர்கள் சொல்வார்கள். தமிழகத்தில் நல்லாட்சி வரும். எங்கள் கழக பொதுச்செயலாளர் நல்ல ஒரு ஆட்சியைத் தருவார் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது” என தெரிவித்தார்.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறுகிறதா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளிக்காமல் தம்பிதுரை சென்றுவிட்டார்.
இதனிடையே, திமுக – அதிமுக கூட்டணி ஏற்பட வாய்ப்பு இருக்கிறதா என்ற கேள்விக்கு, “அதற்கு வாய்ப்பு இருப்பதாக நான் கருதவில்லை என்று திமுக செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார். செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டியளித்த அவர், அது சாத்தியம் என்று நான் நினைக்கவில்லை. ஏனெனில், தமிழக அரசியலில் திமுகவும் அதிமுகவும் மிகப் பெரிய எதிரிகள். திமுக – அதிமுகவுக்கு இடையில் சிலர் வருவார்கள், போவார்கள். எனவே, திமுகவும் அதிமுகவும் கூட்டணி அமைப்பதற்கான வாய்ப்பு இருப்பதாக நான் கருதவில்லை” என தெரிவித்தார்.
நேற்றைய திமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் எந்த ஒரு முடிவையும் எடுக்க அதிகாரம் வழங்கப்பட்டதை எப்படிப் பார்க்கிறீர்கள் என்ற கேள்விக்கு, “ஏனெனில் அவர்களால் அமைச்சரவையை அமைக்க முடியாது. ஒரு எதிர்க்கட்சி என்ற முறையில் எவ்வாறு நாங்கள் செயல்பட வேண்டும், சட்டப்பேரவையில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து அவர் ஆலோசனை வழங்குவார். அவ்வளவுதான்” என தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே பா.ஜ.க. கூட்டணியிலிருந்து அ.தி.மு.க. விலக வாய்ப்பிருக்கிறது என்கிறார்கள்.
