தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தனது சர்ச்சைப் பேச்சுக்களால் தொடர்ச்சியாக சங்கடத்தை ஏற்படுத்தி வந்த பொன்முடியின் பதவி சமீபத்தில்தான் பறிக்கப்பட்டது.

இந்த நிலையில்தான் ‘‘மைக் முன் பேசும் போது மன்னர்களாக நினைத்து கொள்கிறார்கள். அரசியல்வாதிகள் பொது இடங்களில் பேசும் போது யோசித்து பேச வேண்டும்’’ என ஆபாச பேச்சு தொடர்பாக பொன்முடி வழக்கில், சென்னை ஐகோர்ட் நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.

சென்னையில் அன்பகத்தில் நடந்த ஒரு கூட்டத்தில் பங்கேற்ற, தி.மு.க.,வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் பொன்முடி, சைவம், வைணவ சமயங்களை இழிவுபடுத்தும் வகையில் பேசினார். அவரது பேச்சுக்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர். இதையடுத்து, தி.மு.க., துணை பொதுச்செயலர் பதவியில் இருந்து, பொன்முடி நீக்கப்பட்டார்.

தொடர்ந்து, அமைச்சர் பதவியும் பறிபோனது. ஆபாச பேச்சு தொடர்பாக, சென்னை ஐகோர்ட் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது. இந்த வழக்கு, நீதிபதி பி.வேல்முருகன் முன், இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, நீதிபதி கூறியதாவது: ‘‘ மைக் முன் பேசும் போது மன்னர்களாக நினைத்து கொள்கிறார்கள்.அரசியல்வாதிகள் பொது இடங்களில் பேசும் போது யோசித்து பேச வேண்டும்.

அரசியல்வாதிகளின் சர்ச்சை பேச்சுகளை நீதிமன்றம் வேடிக்கை பார்த்து கொண்டு இருக்காது’’ இவ்வாறு சென்னை ஐகோர்ட் நீதிபதி தெரிவித்தார்.

இதையடுத்து வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 1ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal