கவிப்பேரரசு வைரமுத்து மீது பாடகி சினிமயி பாலியல் புகார் தெரிவித்த நிலையில், மேலும் ஒரு பாடகி பாலியல் புகார் தெரிவித்திருப்பதுதான், திரையுலகைத் தாண்டி, அரசியலிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

கவிஞர் வைரமுத்து தங்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பல பெண்கள் புகார் தெரிவித்தனர். இந்நிலையில் பாடகி புவனா சேஷனும் அந்த பட்டியலில் சேர்ந்திருக்கிறார். வைரமுத்து தனக்கும் பாலியல் தொல்லை அளித்ததாக புவனா தெரிவித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது. மேலும் வைரமுத்துவுக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வரும் பாடகி சின்மயியின் தைரியத்தை பாராட்டியுள்ளார் புவனா.

சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் புவனா சேஷன் கூறியிருப்பதாவது, ‘‘சுமார் 17 பெண்கள் வைரமுத்துவுக்கு எதிராக புகார் தெரிவித்தனர். அதில் நான்கு பேர் தான் தைரியமாக தங்கள் முகத்தை காட்டியதுடன், பெயரையும் தெரிவித்தார்கள். பாலியல் தொல்லை சூழலில் இருந்து வெளியே வருவது மிகவும் கடினம் என்றார்.பல இளம் பாடகிகளின் கனவு பாதிக்கப்படக் கூடாது என்று தான் என் கதையை நான் தற்போது கூறுகிறேன். எனக்கு நடந்தது பிற பெண்களுக்கு நடக்கக் கூடாது என விரும்புகிறேன். சின்மயி போன்று தைரியமாக இருப்பது பெரிய விஷயம். அது மிகவும் கடினமும் கூட. விசாரணை நடக்காததால் பல பெண்கள் அவதிப்பட்டு வருகிறார்கள்’’ என்றார்

வைரமுத்து தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பாடகி சின்மயி தெரிவித்தார். கடந்த 5 ஆண்டுகளாக இது குறித்து சமூக வலைதளங்களில் குரல் கொடுத்து வருகிறார். வைரமுத்துவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை விடுத்துக் கொண்டிருக்கிறார் சின்மயி. இதற்காக சின்மயியை சமூக வலைதளங்களில் கிண்டல் செய்கிறார்கள். ஆனால் அதையும் தாண்டி அவர் குரல் கொடுத்து வருகிறார்.

பாலியல் தொல்லைக்கு ஆளான பிற துறைகளை சேர்ந்த பெண்களுக்காகவும் குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறார் சின்மயி. தங்களுக்கு ஏதாவது பிரச்சனை என்றால் அதை சின்மயியிடம் பலர் தெரிவிக்கிறார்கள். அவர் சமூக வலைதளம் மூலம் நியாயம் கேட்டு வருகிறார். இதற்காக சின்மயியை பாராட்டுபவர்கள் பாராட்டினாலும், கிண்டல் செய்பவர்கள் தொடர்ந்து மோசமாகத் தான் பேசி வருகிறார்கள். இந்நிலையில் தான் சின்மயியை பாராட்டியிருக்கிறார் புவனா சேஷன்.

டெல்லியில் போராடிய மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஆதரவாக ட்வீட் செய்தார் உலக நாயகன் கமல் ஹாசன். நாட்டின் பெருமைக்காக போராடாமல் அவர்கள் தங்களின் பாதுகாப்புக்காக போராட வைக்கப்பட்டிருக்கிறார்கள் என்றார் கமல். அதை பார்த்த சின்மயி, பாலியல் தொல்லை கொடுத்த ஒருவரின் பெயரை சொன்னதற்காக தமிழ்நாட்டில் ஒரு பாடகியை தடை செய்து 5 ஆண்டுகளாகிவிட்டது. அந்த கவிஞருக்கு மரியாதை இருப்பதால் யாரும் பேசவில்லை. தங்கள் கண் முன்னே நடக்கும் கொடுமையை கண்டுகொள்ளாமல் பெண்களின் பாதுகாப்பு குறித்து பேசும் அரசியல்வாதிகளை எப்படி நம்புவது என கேட்டார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal