தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வந்த விஜய் ஆண்டனி, தற்போது முழுநேர நடிகராக மாறிவிட்டார். இவர் நடிப்பில் அண்மையில் ரிலீஸ் ஆன திரைப்படம் பிச்சைக்காரன் 2. இப்படத்தின் மூலம் இயக்குனராகவும் அவதாரம் எடுத்தார் விஜய் ஆண்டனி. பிச்சைக்காரன் 2 திரைப்படம் கடந்த மே 19-ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது. உலகம் முழுவதும் 1500க்கும் மேற்பட்ட திரைகளில் இப்படம் வெளியானது.

பிச்சைக்காரன் படத்தின் முதல் பாகத்திற்கு இணையாக இப்படம் இல்லாவிட்டாலும், பேமிலி ஆடியன்ஸை கவரும் விதமாக கதையம்சம் அமைந்திருந்ததால், கலவையான விமர்சனங்கள் வந்தாலும், இப்படம் பாக்ஸ் ஆபிஸில் வசூல் மழை பொழிந்து வருகிறது. குறிப்பாக தமிழ் நாட்டைவிட தெலுங்கில் இப்படத்திற்கு ஏகோபித்த வரவேற்பு கிடைத்து வருகிறது. இரண்டாவது வாரமாக வெற்றிநடை போட்டு வரும் இப்படம் இதுவரை ரூ.30 கோடிக்கு மேல் வசூலித்து உள்ளது.

தொடர்ந்து திரையரங்குகளில் இப்படத்திற்கு வரவேற்பு கிடைத்து வருவதால், விரைவில் ரூ.50 கோடி வசூலையும் பிச்சைக்காரன் 2 திரைப்படம் எட்டிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. தான் எதிர்பார்த்ததை விட இப்படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்து வருவதால், நடிகர் விஜய் ஆண்டனியும், பிச்சைக்காரன் 2 படக்குழுவும் செம்ம ஹாப்பியாக உள்ளார். விரைவில் பிச்சைக்காரன் படத்தின் 3-ம் பாகத்தை எடுக்க உள்ளதாகவும் அறிவித்துள்ளார்.

வழக்கமாக படங்களுக்கு வரவேற்பு கிடைத்தால், படக்குழுவினர் அனைவரையும் அழைத்து சக்சஸ் பார்ட்டி கொண்டாடுவர். ஆனால் விஜய் ஆண்டனி வித்தியாசமான முறையில் பிச்சைக்காரன் 2 படத்தின் சக்சஸ் பார்ட்டியை கொண்டாடி உள்ளார். அதன்படி பிச்சைக்காரர்களுக்கு உதவி செய்து பிச்சைக்காரன் 2 படத்தின் வெற்றியை கொண்டாடி வருகிறார் விஜய் ஆண்டனி.

கடந்த சில தினங்களுக்கு முன் பிச்சைக்காரர்களுக்கு தேவையான பொருட்களை வழங்கி இருந்த விஜய் ஆண்டனி, தற்போது நூற்றுக்கணக்கான பிச்சைக்காரர்களை பைவ் ஸ்டார் ஓட்டலுக்கு அழைத்து சென்று, அவர்களுக்கு விருந்து கொடுத்துள்ளார். பிச்சைக்காரர்களுக்கு விஜய் ஆண்டனியே தன் கையால் பிரியாணியை பரிமாறி இருக்கிறார். அதுமட்டுமின்றி அவர்களுக்கு ஐஸ்கிரீம் மற்றும் இனிப்புகளையும் வழங்கி அவர்களின் பசியாற்றி மகிழ்ந்துள்ளார். இதுகுறித்த வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகின்றன.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal