உலக நாயகனின் வாரிசாக இருந்த போதிலும் ஸ்ருதிஹாசனுக்கு இப்போது தமிழில் மார்க்கெட் குறைந்துவிட்டது என்பது தான் உண்மை. நடிக்க வந்த புதிதில் கோலிவுட்டின் முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்த இவர் இப்போது தெலுங்கு பக்கம் கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறார்.

சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த வால்டர் வீரய்யா, வீரசிம்ஹா ரெட்டி நல்ல வரவேற்பை பெற்றது. அதைத்தொடர்ந்து பிரபாஸ் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் சலார் படத்திலும் இவர் நடித்துள்ளார். அது மட்டுமின்றி நானியின் 30வது படம், ஆங்கில படம் என்று அம்மணி இப்போது படு பிஸியாக இருக்கிறார்.

இந்த சூழலில் சமீபத்தில் இவர் கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொண்டார். அப்போது ஹீரோயின்களுக்காக இவர் வரிந்து கட்டி பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது அஜித், விஜய் போன்ற ஹீரோக்களை விட எந்த விதத்திலும் ஹீரோயின்கள் குறைந்து போய்விடவில்லை, எங்களுக்கும் அதிக சம்பளம் கொடுக்க வேண்டும்.

பாலிவுட்டில் இருந்து ஹாலிவுட் சென்ற பிரியங்கா சோப்ரா அங்கு ஹீரோக்களுக்கு நிகரான சம்பளம் வாங்குகிறார். அதை கேட்கும் போது பெருமையாக இருக்கிறது. ஆனால் இங்கு நாயகிகளுக்கு இணையான சம்பளம் யாரும் கொடுப்பதும் கிடையாது, அது குறித்து பேசுவதும் கிடையாது என்று அவர் தெரிவித்துள்ளார்.

அவர் கூறிய இந்த விஷயம் தற்போது பல்வேறு கருத்துக்களை எழுப்பியுள்ளது. பொதுவாகவே திரை உலகில் ஹீரோக்களுக்கு உச்சகட்ட சம்பளம் தான் கொடுக்கப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம் அந்த ஹீரோவுக்கு இருக்கும் மார்க்கெட் தான். அதன் மூலம் தயாரிப்பாளருக்கான பிஸ்னஸ் எகிறும் என்ற காரணத்தினால் அஜித், விஜய் ஆகியோர் 100 கோடியை தாண்டி கூட ஹீரோக்கள் சம்பளம் வாங்குகின்றனர்.

மேலும் அவர்களை வைத்து தான் ஒரு படத்தின் வியாபாரமும் நடக்கிறது என்பதுதான் நிதர்சனம். இந்த நிலையில் ஸ்ருதிஹாசனின் கருத்துக்கு வரவேற்பு ஒரு பக்கம் இருந்தாலும் விமர்சனமும் எழுந்துள்ளது. அதாவது பிரியங்கா சோப்ரா பணத்தாசையில் ஹாலிவுட் பக்கம் சென்று ஓவர் கவர்ச்சியில் நடித்தார். அதனால் சம்பளமும் அதிகமாக கிடைத்தது. இது என்ன பெருமைப்படக்கூடிய விஷயமா எனவும் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal