தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். இவரைப்பற்றிய திருமண வதந்திகள் தொடர்ந்து வெளிவந்த வண்ணம் உள்ளன. முதலில் அவர் அனிருத் உடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் வெளியான சமயத்தில், அவர்கள் இருவரும் காதலிப்பதாக வதந்திகள் பரவியதோடு, திருமணம் செய்ய உள்ளதாகவும் கூறப்பட்டது. பின்னர் அனிருத் தன்னுடைய நெருங்கிய நண்பன் என கீர்த்தி விளக்கம் அளித்தார்.

இதையடுத்து நடிகை கீர்த்தி சுரேஷ் தொழிலதிபர் ஒருவரை காதலிப்பதாகவும், இருவரது திருமணத்துக்கும் குடும்பத்தினர் சம்மதம் தெரிவித்துவிட்டதாக ஒரு தகவல் காட்டுத்தீ போல் பரவியது. ஆனால் இதனை கீர்த்தி சுரேஷின் பெற்றோர் திட்டவட்டமாக மறுத்ததோடு, தற்போது அவர் நடிப்பில் கவனம் செலுத்தி வருவதால், திருமணம் பற்றி அவர் யோசிக்கவே இல்லை என விளக்கம் அளித்திருந்தனர். இதன்பின்னர் சற்று தணிந்து இருந்த கீர்த்தி சுரேஷின் திருமண வதந்தி சமீபத்தில் மீண்டும் பரவத் தொடங்கியது.

இதற்கு காரணம் கீர்த்தி சுரேஷ் போட்ட பதிவு தான். அவர் துபாயில் உள்ள தொழிலதிபர் ஒருவருடன் மேட்சிங் மேட்சிங் உடையணிந்தபடி நெருக்கமாக எடுத்த புகைப்படத்தை பதிவிட்டு அவருக்கு பிறந்தநாள் வாழ்த்தும் தெரிவித்து இருந்தார். இதைப்பார்த்த நெட்டிசன்கள் இவர் தான் கீர்த்தி சுரேஷின் காதலர் என்றும், இவரை தான் அவர் திருமணம் செய்துகொள்ள உள்ளதாகவும் பரப்பிவிட்டனர். இதனால் மீண்டும் கீர்த்தி சுரேஷின் திருமண பேச்சுகள் எழத்தொடங்கின.

இந்நிலையில், திருமண சர்ச்சை குறித்து நடிகை கீர்த்தி சுரேஷ் விளக்கம் அளித்துள்ளார். அதன்படி அதுகுறித்து அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது : “ஹாஹாஹா… இந்த நேரத்தில் என் நண்பனை இதில் இழுக்க வேண்டாம். நேரம் வரும்போது நானே அந்த மர்ம மனிதனை காட்டுகிறேன். அதுவரை சில் பில் ஆக காத்திருங்கள். பின்குறிப்பு : இதுவரை ஒருமுறை கூட யாரும் சரியாக கண்டுபிடிக்கவில்லை” என குறிப்பிட்டுள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் கீர்த்தி சுரேஷ் திருமணம் செய்யப்போகும் அந்த மர்ம மனிதன் யார் என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal