அ.தி.மு.க.வில் அவ்வப்போது கவிதை வடிவில் எடப்பாடி பழனிசாமியின் டீம் மீது சாட்டையை சுழற்றி வருகிறார் மருது அழகுராஜ்! இந்த நிலையில்தான் நேற்று ‘முடியும் வேளையும்… விடியும் காலையும்..!’ என்ற தலைப்பில் ‘அபகரிப்பு அரசியல்’ என்ற தலைப்பில் எடப்பாடி தரப்பை வெளுத்து வாங்கியிருக்கிறார்.

இது தொடர்பாக மருது அழகுராஜ் வெளியிட்டுள்ள வலைதளப் பதிவில், ‘‘எடப்பாடியின் அபகரிப்பு அரசியலை மிகத் தீவிரமாக எதிர்த்து நிற்கும் கழக கொள்கைப் பரப்பு செயலாளர் அண்ணன் புகழேந்தி மீது எடப்பாடியின் கூலிப்படை தாக்குதல் நடத்த முயற்சித்திருக்கிறது.

நாளுக்கு நாள் வெகு ஜன மக்களாலும் புரட்சித் தலைவர் புரட்சித் தலைவி அம்மாவின் உண்மைத் தொண்டர்களாலும் வெறுப்புக்கு ஆளாகி வரும் எடப்பாடியின் அதிகாரப்பித்து

கையில் எடுத்திருக்கும் கடைசி ஆயுதம் தான் இது போன்ற அவரது வன்முறைத் தூண்டுதல்களாகும்.

ஆம்..தொண்டர்களை மோதிக் கொள்ள வைத்து ரத்தம் குடிக்கப் பார்க்கிறது எடப்பாடி என்னும் ஓநாய்..

தகுதியற்ற ஒருவருக்கு தகுதிக்கு மீறிய வாய்ப்பு கிடைத்தால் அதனை தக்க வைத்துக் கொள்ள எத்தகையை எல்லைக்கும் செல்வார்கள் என்பதற்கு சம காலச் சாட்சியாக விளங்கும் எடப்பாடியின் ஒவ்வொரு செயலையும் மனட்சாட்சி கொண்ட தொண்டர்களும் தெய்வத்துக்கு நிகரான மக்கள் சக்தியும் அருவருப்போடே பார்க்கிறது.

இதையெல்லாம் உணருகிற அளவுக்கு பக்குவமோ பெருந்தன்மையோ இல்லாத ஒரு காட்டுமிராண்டியாக இருக்கும் எடப்பாடியை கேடயமாக வைத்து அதிமுகவின் பிளவில் ஆதாயம் தேட தி.மு.க. போடும் கணக்கால் மட்டுமே எடப்பாடியின் சிறைபோகும் காலம் தள்ளிப் போகிறதே தவிர எடப்பாடியால் எக்காலத்திலும் அதனை தவிர்க்க முடியாது என்பது நிச்சயம்.

கழகத்தை விட்டு எடப்பாடியே வெளியேறு என தொண்டர்களால்துரத்தி அடிக்கப்படப் போகும் ஒரு சர்வாதிகாரியின் கடைசி முயற்சிகள் எப்படி இருக்குமோ அதனைத் தான் சிலுவம்பாளையத்து சிரிப்புச் சர்வாதிகாரியின செயல்களும் மெய்ப்பிக்கின்றன..

திரி நெருப்பு ஆட்டமும் தீயோரது கொக்கரிப்பும் முடியப் போவதை சொல்லும் முன்னறிவிப்பே என்பதை கருத்தில் கொண்டு இதனை கடந்து போவோம்.

ஒப்பில்லா தாய் தந்த நம் தப்பில்லா தங்க மகன் ஓ.பி.எஸ் தலைமையில் ஒன்றரைக் கோடி தொண்டர்களும் ஒன்றாகும் காலம் விரைவில் மலரக் காத்திருக்கிறது.

தாய் வழி வந்த தங்கங்கள் எல்லாம் ஒர் வழி நின்று நேர்வழி சென்றால் நாளை நமதே என்னும் மக்கள் திலகம் நமக்கு போதித்த வழியில்ஒன்றினைந்து சாதிக்கவும் புரட்சி தலைவி அம்மாவின் லட்சியங்களை சத்தியங்களாக்கவும் எடப்பாடி இல்லாத எதிர்கால அண்ணா தி.மு.க. வை முன்னெடுப்போம்.

இதனை தடுக்க முயற்சிக்கும் குத்துக் கோல் புகழ் எடப்பாடியின் குயுக்திகளை தவிடு பொடியாக்குவோம்.

இதற்கு கழகமே உலகமென வாழும் அப்பழுக்கற்ற அண்ணா திமுக வின் ஒப்பற்ற உறவுகளை வாரீர் வாரீர்..

என நம் தாய் காட்டிய அடையாளம் அண்ணன் ஒ.பி.எஸ் அழைக்கிறார்’’ என்று வெளியிட்டிருக்கிறார்!

அ.தி.மு.க. கொள்கை பரப்புச் செயலாளர் மருது அழகுராஜின் கவிதை வரிகள் சோர்ந்து கிடக்கும் ஓ.பி.எஸ். தொண்டர்களை அவ்வப்போது உற்சாகமாக்கி வருகிறது என்றால் அது மிகையல்ல..!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal