தமிழகத்தில் திமுக ஆட்சிப் பொறுப்பு ஏற்றதிலிருந்து கள்ளச்சாராயம், பாலியல் வன்கொடுமை, கஞ்சா விற்பனை, கொலை, கொள்ளை போன்ற அனைத்து சம்பவங்களும் அதிகரித்துள்ளது என எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி;- கள்ளச்சாராயம் அருந்தி சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தவருக்கு ஆழ்ந்த இரங்கல். தமிழகத்தில் திறமையற்ற முதலமைச்சர் இருக்கிறார். அதேபோன்று காவல்துறையினர் சுதந்திரமாக பணியாற்ற முடியவில்லை.

தமிழகத்தில் திமுக ஆட்சிப் பொறுப்பு ஏற்றதிலிருந்து இதுவரை சட்ட ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது. கள்ளச்சாராயம், பாலியல் வன்கொடுமை, கஞ்சா விற்பனை, கொலை, கொள்ளை போன்ற அனைத்து சம்பவங்களும் அதிகரித்துள்ளது. கஞ்சா ஒழிப்பு 2.0, 3.0 என ஓ போட்டுக் கொண்டிருக்கின்றனர். தமிழ்நாட்டில் 24 மணிநேரமும் டாஸ்மாக் கடைகள் திறந்தே இருக்கின்றன.

உடனடியாக திறமையற்ற முதல்வர் ஸ்டாலின் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். அதேபோன்று அமைச்சர் செந்தில் பாலாஜி தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். திமுக அரசு மக்களின் நலனின் எந்த ஒரு அக்கறையும் காட்டாமல் வருமானத்தை மட்டுமே கருத்தில் கொண்டு செயல்பட்டு வருகிறது. பலமுறை சட்டப்பேரவையில் கள்ளச்சாராயம் போலி மதுபானத்தை தடை செய்ய வேண்டும் கட்டுப்படுத்த வேண்டும் என குரல் கொடுத்தும் இதுவரை செவி சாய்க்காத அரசு தான் இந்த விடியா அரசு. 500 டாஸ்மாக் கடைகளை மூடுவதாக சொல்லி 1000 டாஸ்மாக் கடைகளை திறக்கின்றனர்.

நாமக்கல் மாவட்டம் ஜோடார்பாளையத்தில் தனியார் ஆலையில் பணிபுரியும் வட மாநிலத்தவர்கள் உறங்கிக் கொண்டிருக்கும்போது இரவு நேரத்தில் அங்கு பெட்ரோல் கொண்டு வீசப்பட்டுள்ளது. உயிருக்கு போராடும் நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இது போன்று தொடர்ந்து தமிழகத்தில் பல்வேறு குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இந்த திமுக அரசு விடியாக அரசு திறமையற்ற முதலமைச்சர், திறமையற்ற அமைச்சர்கள் இருப்பதால் தான் இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது என குற்றம்சாட்டியுள்ளார். நாளை மரக்காணம் சென்று பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆறுதல் கூற உள்ளேன் என எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal