ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் அணியின் மாவட்ட பொறுப்பில் உள்ள நிர்வாகிகள் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் தங்களை அதிமுகவில் இணைத்துக்கொண்டனர்.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுகவில் ஏற்பட்ட அதிகார போட்டியால் சசிகலா, டிடிவி தினகரன், ஓ.பன்னீர் செல்வம் என அடுத்தடுத்து கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். இதனையடுத்து அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். தொடர்ந்து தமிழகம் முழுவதும் அதிமுகவை பலப்படுத்தும் வகையில் தீவிர சுற்றுப்பயணமும் மேற்கொண்டு வருகிறார்.

மேலும் அதிமுக வாங்கு வங்கிகள் சிதறி கிடக்கும் நிலையில் அதனை ஒன்றுபடுத்தும் வகையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகிகள் மற்றும் ஓ.பன்னீர் செல்வத்தின் ஆதரவு நிர்வாகிகளை தங்கள் அணிக்கு இணைக்கும் பணியில் தீவிரமாக எடப்பாடி பழனிசாமி ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் நேற்று எடப்பாடி பழனிசாமியை சந்தித்து டிடிவி மற்றும் ஓபிஎஸ் அணியின் நிர்வாகிகள் அதிமுகவில் இணைந்தனர்.

இது தொடர்பாக அதிமுக தலைமை அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், பொதுச் செயலாளரும், மாண்புமிகு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி அவர்களை, சென்னை, பசுமைவழிச் சாலையில் உள்ள செவ்வந்தி இல்லத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த, திருவண்ணாமலை தெற்கு மாவட்டப் பொருளாளர் அன்புமணி, மாவட்ட மீனவர் பிரிவுச் செயலாளர் ரவிநாட்டார், மாவட்ட இளைஞர் அணி இணைச் செயலாளர் திருமலை, மாவட்ட மாணவர் அணித் தலைவர் மலர்வண்ணன்; தே.மு.தி.க-வைச் சேர்ந்த, செங்கம் கிழக்கு ஒன்றியச் செயலாளர் சிவகுமார், கிளைச் செயலாளர்களான சுதாகர், சேகர், ஊராட்சிச் செயலாளர் ராஜவேல், இளைஞர் அணிச் செயலாளர் வெங்கடேசன் மற்றும் தி.மு.க. கிளைச் செயலாளர் ஏழுமலை உள்ளிட்ட அக்கட்சிகளைச் சேர்ந்த 150 பேர் நேரில் சந்தித்து தங்களைக் கழகத்தின் அடிப்படை உறுப்பினர்களாக இணைத்துக்கொண்டனர்.

ஓ.பி.எஸ்., டி.டி.வி. அணி நிர்வாகிகளை எடப்பாடி பழனிசாமி தட்டித் தூக்குவதால், தடுமாற்றத்தில் இருக்கிறார்கள் ஓ-.பி.எஸ். மற்றும் டி.டி.வி.தினகரன்!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal