ஓ.பன்னீர் செல்வம் நீதிமன்றத்தையும், தேர்தல் ஆணையத்தையும் நம்பி காய்கள் நகர்த்தி வரும் நிலையில், எடப்பாடி பழனிசாமி செயற்குழு கூட்டம், அடுத்து மா.செ.க்கள் கூட்டம் என அடுத்தடுத்த அதிரடிக்கு தயாராகி வருகிறார்.

அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் வரும் 20ம் தேதி கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற உள்ளதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, முதன் முறையாக அவசர செயற்குழு கூட்டம் அதிமுக தலைமை அலுவலகத்தில் கடந்த 16ம் தேதி அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் நடைபெற்றது.

அப்போது, அதிமுக பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எடப்பாடி பழனிசாமிக்கு வாழ்த்தும், பாராட்டும் தெரிவிப்பது. வரும் ஆகஸ்ட் 20-ந்தேதி மதுரையில் அதிமுக மாநில மாநாடு, நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெற உழைக்க வேண்டும். அதிமுகவில் கொள்கை ரீதியான முடிவுகளை மேற்கொள்ள எடப்பாடி பழனிசாமிக்கு முழு அதிகாரம் உள்ளிட்ட 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்நிலையில், வரும் 20ம் தேதி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. அப்போது, நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்கூட்டியே தயாராவது, உறுப்பினர் சேர்க்கை, பூத் கமிட்டி அமைப்பது தொடர்பாக ஆலோசிக்க வாய்ப்புள்ளது. அதேபோல், பொதுக்குழு வழக்கு இறுதி விசாரணை வர உள்ள நிலையில் இந்த விவகாரம் தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட வாய்ப்புள்ளது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal