ஈரோட்டில் உள்ள ஈவிகேஎஸ் இளங்கோவன் வீட்டுக்கே பட்டா இல்லை என அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் சட்டசபையில் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.

தமிழக பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்று வரும் நிலையில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் இன்று நடைபெற்றது. இதில் பேசிய வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், பட்டா இல்லாதவர்களுக்கு பட்டா கொடுக்கும் பணிகளை விரைந்து முடிக்குமாறு அதிகாரிகளுக்கு தாம் அறிவுறுத்தியிருப்பதாக கூறினார்.

ஈரோட்டில் உள்ள ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வீட்டுக்கே பட்டா கிடையாது என்றும் இதைச் சொன்னால் யாராவது நம்புவீர்களா எனவும் வினவினார். ஆனால் உண்மை அது தான் என்றும், இதோ இளங்கோவன் அண்ணாச்சியை கூட கேட்டுப்பாருங்க எனவும் அவரை கோர்த்துவிட்டார்.

இடைத்தேர்தலில் வென்ற பிறகு இளங்கோவனே இன்று தான் முதல் முறையாக சட்டசபைக்கு வருகிறார். இந்நிலையில் தன்னை விவாதப் பொருளாக்கும் வகையில் அமைச்சர் பேசியது அவருக்கு அதிர்ச்சியை கொடுத்தாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை.

அதேபோல் பெரியார் வீட்டுக்கு பட்டா இல்லை என்றும் இந்த தகவலை தாம் முதலமைச்சரிடம் கூறிய போது அவரே ஆச்சரியப்பட்டு போனார் என்றும் எப்படி இவ்வளவு பெரிய ஆட்கள் விட்டார்கள் என தன்னிடம் கேட்டதாகவும் கூறினார். ஆகையால் பட்டா விடுபட்டவர்களுக்கு முதல் வேலையாக பட்டா கொடுப்பதற்கு அதிகாரிகளை அறிவுறுத்தியுள்ளதாக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ராமச்சந்திரன் தெரிவித்தார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal