நடிகர் மன்சூர் அலிகான், இயக்குநர் ஆர்.வி.உதயகுமார், முன்னாள் அமைச்சர் கோமதி உள்ளிட்டோர் இன்று தவெகவில் இணைந்தனர். அப்போது, “அதிமுகவும் தவெகவும் எப்போதும் ஒன்றுதான். இரு கட்சிகளுக்கும் ஒரே கொள்கைதான்” என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.
பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் மாற்று கட்சியினர் இணைப்பு விழா நடந்தது. தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆகியோர் நடிகர் மன்சூர் அலிகான், இயக்குநர் ஆர்.வி.உதயகுமார், முன்னாள் அமைச்சர் கோமதி உள்ளிட்டோரை வரவேற்றனர்.
இந்த நிகழ்வில் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, “50 ஆண்டுகள் பழமைவாதியான செங்கோட்டையனை கட்சியிலிருந்து நீக்கியது அதிமுக தலைமையின் தவறு. வந்தால் பதவி தருவோம் என கூறி வியாபாரம் செய்யும் கட்சி தவெக இல்லை.
அதிமுகவும் திமுகவும் ஒன்று சேர்ந்துவிட்டனர். அதனால் தான் அதிமுகவினர் தவெகவில் இணைகின்றனர். அதிமுகவின் 90 சதவிகித தொண்டர்கள் தவெகவை நோக்கி வர ஆரம்பித்துவிட்டனர். அதிமுகவும், தவெகவும் எப்போதும் ஒன்றுதான். இரு கட்சிகளுக்கும் ஒரே கொள்கைதான்” என்றார்.
முன்னதாக, அதிமுகவை சேர்ந்த 4 எமஎல்ஏக்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்துவிட்டு கட்சியில் இணைந்ததை தொடர்ந்து, அதிமுக முன்னாள் எம்.பி, எம்எல்ஏக்கள் என பலரும் இணைந்தனர்.
கடந்த வாரம் பாஜகவை சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ விஜயதரணி, அதிமுக முன்னாள் அமைச்சர் பச்சைமால் உள்ளிட்ட பலர் கட்சியில் இணைந்தனர். இரண்டு நாட்களுக்கு முன்னர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சி.மகேந்திரன் தவெகவில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.
