நெல்லையில் மதுபோதையில் விபத்து ஏற்படுத்திய குடிமனுக்கு நீதிமன்றம் நூதனமுறையில் தண்டனை விதித்து, ஜாமீன் வழங்கியிருக்கிறது!

திருநெல்வேலி மாவட்டம் தச்சநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் நீர்காத்தலிங்கம் (வயது 28). கடந்த மாதம் 12ம் தேதி நெல்லை தச்சநல்லூர் பகுதியில் மது போதையில் இருசக்கர வாகனம் ஓட்டி மற்றொரு இருசக்கர வாகனம் மீது மோதி விபத்து ஏற்படுத்தியுள்ளார். இந்த விபத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக திருநெல்வேலி மாநகரப் போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல் துறையினர் 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து நீர் காத்தலிங்கத்தை கைது செய்தனர். இதனைத் தொடர்ந்து நெல்லை மாவட்ட நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து இரண்டாவது முறையாக நீர் காத்தலிங்கம் ஜாமீன கோரி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை நீதிபதி ஜெசிந்தா மார்ட்டின் முன்னிலையில் நடைபெற்றது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி நீர்க்காத்த லிங்கத்துக்கு பல்வேறு நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

அந்த உத்தரவில் நீர் காத்தலிங்கம் தினமும் நள்ளிரவு 12 மணிக்கு நெல்லை டவுன் அருகே உள்ள குறுக்குத்துறை டாஸ்மாக் மதுபான கடையை சுத்தம் செய்ய வேண்டும். மறு உத்தரவு வரும் வரை இந்த நடைமுறையை பின்பற்ற வேண்டும். நீர் காத்தலிங்கம் செய்யும் பணியினை காவல்துறையினர் கண்காணிக்க வேண்டும் எனவும் அந்த உத்தரவில் குறிப்பிட்டு உள்ளார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal