ஈரோடு கிழக்கில் இடைத்தேர்தல் நடக்க இருப்பதால், வாக்காளர்கள் பிரச்சாரத்தில் மூழ்கியிருப்பதால், அங்குள்ள தொழில் நிறுவனங்களில் ஆட்கள் இன்றி முடங்கிக் கிடக்கிறது. மேலும், தினந்தோறும் விதம் விதமாக பரிசுப் பொருட்களில் நனைகின்றனர் கிழக்கு தொகுதி மக்கள்!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் 77 வேட்பாளர்கள் போட்டியிட்டாலும் தி.மு.க. கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸ், அ.தி.மு.க. வேட்பாளருக்கு இடையே தான் கடுமையான போட்டி நிலவி வருகிறது. அதுவும் காங்கிரஸ் வேட்பாளர் போட்டியிட்டாலும் தி.மு.க.-அ.தி.மு.க. இடையே தான் கடும் பலப்பரீட்சை ஏற்பட்டு உள்ளது. இந்த தேர்தலில் ஒவ்வொரு கட்சியும் வியூகம் அமைத்து பிரசாரம் செய்து வருகின்றனர்.

அரசியல் கட்சிகளின் பிரசார வியூகம் வாக்காளர்களுக்கு ஜாக்பாட்டாக மாறி இருக்கிறது. தொழிலாளர்கள் நிறைந்த இந்த தொகுதி வாக்காளர்கள் பலர் கடந்த 20 நாட்களாக வேலைக்கு செல்லாமல் பிரசாரம் செய்து வருகிறார்கள். வேலைக்கு செல்வதை விட அதிகளவில் வருமானம் வருவதால் மக்கள் பிரசாரத்தை தொழிலாகவே மாற்றிக் கொண்டனர். பிரசாரத்துக்கு செல்லும் பெண்களுக்கு தினமும் குறைந்தது ரூ.750 முதல் ரூ. 1000 வரை கிடைத்து வந்தது. அதோடு இல்லாமல் தேர்தல் பணிமனையில் அமர்ந்து கொண்டால் ரூ.500, பிரியாணி, ஆண்களுக்கு ரூ.500 மற்றும் மதுபாட்டிலும் விநியோகம் செய்யப்பட்டது.

இதனால் இடைத்தேர்தல் பிரசாரத்தை வாக்காளர்கள் ஜாலியாக அனுபவித்தனர். இந்த நிலையில் ஒவ்வொரு பகுதியிலும் வாக்காளர்களுக்கு விதவிதமான பரிசுகள் வழங்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. குக்கர், வெள்ளி கால் கொலுசு, பட்டுபுடவை மற்றும் ஒரு அரசியல் கட்சி சார்பில் ஓட்டுக்கு ரூ.3 ஆயிரம், மற்றொரு அரசியல் கட்சி சார்பில் ரூ.2 ஆயிரம் என வழங்கப்பட்டது. இதனால் வாக்காளர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

சில இடங்களில் பட்டுபுடவை சரியில்லை என்று கூறி பெண்கள் வாக்குவாதம் செய்யும் காட்சிகளும் சமூக வலைதளத்தில் வெளியானது. மொத்ததில் இந்த தேர்தல் காரணமாக கிழக்கு தொகுதி வாக்காளர்களின் தனிநபர் வருவாய் அதிகரித்து இருக்கிறது. 20 நாள் பிரசாரம், ஓட்டுக்கு ரூ.5 ஆயிரம் என ஒவ்வொரு வாக்காளர்களும் சுமார் ரூ.15 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை சம்பாதித்து உள்ளனர்.

இந்த நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதியில் நேற்று பல்வேறு இடங்களில் குறிப்பிட்ட ஒரு அரசியல் கட்சி சார்பில் வாக்காளர்களுக்கு ஸ்மார்ட் வாட்ச் விநியோகம் செய்யப்பட்டு இருக்கிறது. குறிப்பாக திருநகர் காலனி, கிருஷ்ணம் பாளையம், கே.ஏ.எஸ். நகர். திரு.வி.க. வீதி உள்ளிட்ட இடங்களில் ஸ்மார்ட் வாட்ச் விநியோகம் செய்யப்பட்டு இருக்கிறது. தேர்தலுக்கு இன்னும் 2 நாட்கள் இருப்பதால் 2-வது தவணையாக ஏதாவது பணம் மற்றும் பரிசு பொருட்கள் கிடைக்குமா? என்ற எதிர்பார்ப்பில் வாக்காளர்கள் உள்ளனர். மொத்தத்தில் இந்த தேர்தல் பிரசாரம் மக்களுக்கு முழுநேர தொழிலாகவே மாறி விட்டது. இதனால் அங்குள்ள தொழில் நிறுவனங்கள் முற்றிலுமாக முடங்கிக் கிடக்கிறது.

தேர்தல் முடிந்தபிறகு எந்தவொரு கட்சியினரும் கண்டுகொள்ளமாட்டார்கள் என்பதை வாக்காளர்கள் என்றைக்கு உணரப் போகிறார்களோ..? இன்றைக்கு பணம் மற்றும் பரிசு பொருங்கள் வாங்காமல் இருந்தால், என்றைக்கும் அவர்கள் உங்களைத் தேடி வருவார்கள்..!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal