ஈரோடு கிழக்கில் இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் மு.க.ஸ்டாலினை கடுமையாக விமர்சித்தார் எடப்பாடி பழனிசாமி. இவரது பேச்சுக்கு கனிமொழி எம்.பி., பதிலடி கொடுத்த விவகாரம்தான் அரசியல் அரங்கில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

அனல் பறக்கும் பிரச்சாரத்தின் மத்தியில் நேற்று முன்தினம் வாக்களர்கள் மத்தியில் பேசிய எடப்பாடி பழனிசாமி, ‘‘திமுகவினர் மக்களை கொட்டகையில் அடைத்து வைத்திருக்கிறார்கள். நீ ஆம்பளையா இருந்தா, நீ வேட்டி கட்டின ஆம்பளையா இருந்தா, நீ மீசை வச்ச ஆம்பளையா இருந்தா அவங்களை வெளியே விடு!’’ என காட்டமாக திமுகவினரை நோக்கி சீறி பாய்ந்தார்.

இந்நிலையில்தான் ஈரோடு கிழக்கு ஏராளமான ஆதரவாளர்களுக்கு மத்தியில் வாக்கு சேகரித்த கனிமொழி எம்.பி., ‘‘தலைவர் ஸ்டாலினை பார்த்து ஆம்பளையா என்று எடப்பாடி கேட்கிறார். அம்மையார் ஜெயலலிதா இருந்தபோது எடப்பாடி எந்த அளவிற்கு குனிந்து நின்றார் என்பது எங்களுக்கு தெரியும். அதையும் தாண்டி சசிகலா உங்களுக்கு பதவி அறிவித்த போது நீங்கள் எப்படி மண்புழு போல ஊர்ந்து போனீர்கள் என்பதை அனைவரும் பார்த்தோம்.

இதுதான் ஆண்மைக்கு அழகா? ஆம்பளைக்கு அழகா? ஆம்பளைக்கும், மீசைக்கும், வீரத்துக்கும் என்ன சம்பந்தம் என்று எனக்கு தெரியவில்லை. நீங்கள் காலில் விழுந்த ஜெயலலிதாவும், சசிகலாவும் வேட்டியும், மீசையும் வச்சிக்கிட்டா இருந்தாங்க? மீசை தான் வீரம் என்றால், அதற்கு 50 ஆயிரம் போதும், ஆண் பெண்ணாகலாம், பெண் ஆணாகலாம். இதுவா வீரம்?’’ என கடுமையாக எடப்பாடி பழனிசாமியை வறுத்தெடுத்தார் கனிமொழி.

இதற்கிடையே கனிமொழி தேர்தல் பிரச்சாரத்திற்கு வருகிறார் என்ற செய்தி கேட்டவுடன் ஈரோடு கிழக்கு தொகுதியில் உள்ள பெண்கள் ஆர்வமுடன் கனிமொழியை பார்க்க வந்ததோடு, அவருக்கு உற்சாகமான வரவேற்பை கெடுத்தார்கள்.

அ.தி.மு.க.வைச் சேர்ந்த பெண்களும், ஆண்களும் கனிமொழிக்கு வரவேற்பு கெடுத்ததுதான், தி.மு.க.வினரையே வியந்து பார்க்க வைத்தது!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal