பா.ஜ.க. நினைப்பது ஒருபோதும் நடக்காது’ என மக்களவையில் தி.மு.க. துணைப் பொதுச்செயலாளரும் எம்.பி.யுமான கனிமொழி கர்ஜித்திருக்கிறார்!

மக்களவையில் திமுக எம்.பி. கனிமொழி பேசியபோது, ‘‘இந்த நாடு ஒரே நாடு ஒரே வரி ஒரே சந்தை ஒரே கலாச்சாரத்தை உருவாக்க பாஜக நினைக்கிறது. ஆனால் பாஜக நினைப்பது ஒருபோதும் நடக்காது. மாநிலங்களின் உரிமைகளை பறிக்க முயற்சிகளை செய்கிறீர்கள்.

மக்கள் நல அரசு என்பதற்கும் இலவச திட்டங்களுக்கும் இடையே உள்ள வித்தியாசத்தை நீங்கள் புரிந்துக்கொள்ள மறுக்கிறீரகள். நாங்கள் மாநிலங்கள் சமூக நீதிக்கான மாடல்களை உருவாக்க முடிகிறது. ஆனால் உங்களால் அது முடியவில்லை.

தமிழக சட்டசபையில் இயற்றிய 20க்கும் மேற்பட்ட சட்ட வரைவுகளுக்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிக்காமல் தாமதப்படுத்தி வருகிறார். இந்த விவகாரத்தில் தமிழ்நாடு மட்டும் நிற்கவில்லை. மேற்கு வங்கம், கேரளா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களிலும் ஆளுநர்கள் இதையே பின்பற்றுகிறார்கள். மாநில ஆளுநர்கள் மத்திய அரசின் கருவியாக பயன்படுத்தப்படுகின்றனர். ஆளுநர்களுக்கு தனிப்பட்ட எந்த விருப்ப உரிமையும் இல்லை.

ஆளுநரின் அதிகாரம் குறித்து அரசியல் சாசன வடிவமைப்பில் அம்பேத்கர் தெளிவாக கூறியுள்ளார். கூட்டாட்சி தத்துவத்தின் முக்கியத்துவத்தை ஆளுநர்களுக்கு உணர்த்த வேண்டும். தமிழகத்தில் தேர்தல் இல்லை என்பதால் குடியரசு தலைவர் உரையில் திருவள்ளுவரை மறந்துவிட்டார். மத்திய பட்ஜெட்டில் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்திற்கான ஒதுக்கீடு குறைக்கப்பட்டுள்ளது. சுமார் 4 கோடி இந்திய இளைஞர்கள் வேலை வாய்ப்பை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். எங்களது பரிந்துரைகளை மத்திய அரசு காது கொடுத்து கேட்பதில்லை. சட்டங்கள் பற்றி விவாதம் செய்ய நேரம் ஒதுக்குவதில்லை’’ இவ்வாறு அவர் குறிப்பிட்டு பேசினார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal