திமுக துணைப்பொதுச்செயலாளரும், எம்பியுமான கனிமொழியின் பிறந்தநாளை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் மாவட்ட நிர்வாகிகள் பிறந்தநாள் நலத்திட்ட உதவிகள் செய்து வருகிறார்கள்.

அந்தவகையில், நாமக்கல் மாவட்டம் சார்பிலும் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. நாமக்கல் கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை மற்றும் நாமக்கல் கிழக்கு மாவட்ட துணை அமைப்பாளர் கே.மோகன் ஏற்பாட்டின்பேரில், சென்னை, கீழ்ப்பாக்கம் உள்ள ஒரு ஹோமில் முதியோர்களுக்கு உணவு வழங்கப்பட்டது.

இதில், திமுக மாநில மகளிரணி இணைச்செயலாளரும், மகளிர் ஆணையத்தின் தலைவருமான குமரி விஜயகுமார், இதில் பங்கேற்று, முதியோர்கள் அனைவருக்கும் உணவு வழங்கினார்.. சென்னை மாமன்ற உறுப்பினரும், கழக மகளிரணி பிரச்சாரக்குழு செயலாளருமான, கே.ராணி ரவிச்சந்திரன் உள்பட தி.மு.க. நிர்வாகிகள் முன்னிலையில் முதியோர்களுக்கு உணவு வழங்கப்பட்டது.

இதுகுறித்து மகளிர் ஆணையத்தின் தலைவர் குமரி விஜயகுமார் பூரித்து பேசும்போது, ‘‘திமுக எம்பி கனிமொழி மனிதநேயமிக்கவர். அனைத்து பெண்களுக்கும் ரோல் மாடலாக திகழ்ந்து வருபவர். எளிய மக்களிடம் கனிவாக பேசக்கூடியவர். அவரது பிறந்தநாளை முன்னிட்டு, முதியோர்களுக்கு உணவு வழங்கினோம். முதியவர்கள், பெண்கள் என பலரும் தங்கி உள்ள இந்த ஹோமிற்கு, ஏற்கனவே பொங்கல் பண்டிகையின்போது இங்கு வந்திருந்தேன். புத்தாடைகள் உட்பட இனிப்புகளை வழங்கினோம்.

இப்போது மீண்டும் எங்களை பார்த்ததும் முதியவர்கள், கைகளை தட்டி வரவேற்றது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. மிகுந்த மகிழ்ச்சியான தருணமாக அது அமைந்தது. அப்போது முதியவர்களுக்கான சட்டங்கள், பாதுகாப்புகள் குறித்து அவர்களிடம் எடுத்து சொன்னோம். இதைதவிர, மகளிர் ஆணையம் சார்பில், தமிழகம் முழுவதும் ஆய்வுகளை மேற்கொண்டு பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யப்பட்டு வருகிறது. பெண்கள் அளிக்கும் புகார்கள் மீது குறிப்பிட்ட நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதால், அது குறித்த நடவடிக்கையையும் துரிதப்படுத்தி உள்ளோம்.

பெண்களுக்கு அரசு தரும் திட்டங்கள், மற்றும் பெண்களுக்கான சட்டங்களை, அவர்களிடம் எடுத்து சொல்லப்பட்டு வருகிறது. குழந்தை திருமணங்கள் அதிகமாக நடைபெறும் இடங்களை “ப்ளாக் ஸ்பாட்” என்போம். இந்த மாவட்டங்களில் கூடுதல் கவனம் செலுத்துவதுடன், 181 ஹெல்ப் லைன் பற்றி பெண்களிடம் சொல்லி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். ஆதரவற்ற, முதியோர் இல்லம், மற்றும் பெண்கள் தங்கும் விடுதி குறிப்பாக, எஸ்சிஎஸ்டி விடுதிகளில் சிசிடிவி பொருத்தப்பட்டுள்ளதா? சாப்பாடு தரமானதாக இருக்கிறதா என்றெல்லாம் ஆய்வு செய்து வருகிறோம்.. தமிழகம் முழுவதும் சிறப்பான மாவட்ட கலெக்டர்கள் இருப்பதால், குறைகள் ஏதேனும் இருந்தாலும், அதை உடனடியாக நிவர்த்தி செய்துவிடுகிறார்கள்’’ என்றார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal