‘கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் காலியாக உள்ள கௌரவ விரிவுரையாளர்களுக்கான நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு தகுதியின் அடிப்படையில் மட்டுமே பணி வழங்கப்படுமே தவிர பரிந்துரையின் பெயரில் நிச்சயம் பணி வழங்கப்படாது’ என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில்,

‘‘தமிழகம் முழுவதும் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் பாடப் பிரிவுகளில் 1895 நபர்கள் கௌரவ விரிவுரையாளர்கள் நியமிக்கப்படுவார்கள் என்ற அறிவிப்புடன் அதற்கான நேர்முகத் தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

கடந்த பத்து ஆண்டுகளில் நியமிக்கப்பட்ட கௌரவ விரிவுரையாளர்கள் எல்லாம் அந்தந்த கல்லூரி முதல்வர்கள் மூலமாக நியமிக்கப்பட்டனர். ஆனால் அதில் பல குளறுபடிகள் இருந்தது. அது மட்டும் இல்லாமல் பிஹெச்டி பெற்றவர்கள் தகுதி ஆனவர்களுக்கு எல்லாம் வாய்ப்பு கிடைக்கவில்லை என்ற குற்றச்சாட்டு இருந்தது.

கௌரவ விரிவுரையாளர் பணிகளுக்கான காலியிடங்கள் மொத்தம் 50 பாடங்களில் உள்ளது. அதனைத் தொடர்ந்து தமிழகத்தில் 8 வெவ்வேறு பல்கலைக்கழகங்களில் கௌரவ விரிவுரையாளர்கள் பணிகளுக்கான நேர்முக தேர்வுகள் வருகிற 4ம் தேதி தொடங்கி 12ம் தேதி வரை நடைபெறும்.

விண்ணப்பதாரர்களிடம் அந்தந்த துறை சார்ந்த நிபுணர்கள் நேர்முக தேர்வின் போது அவர்களின் திறனை அறிந்து தேர்வு செய்யப்படுவார்கள். தரத்தின் அடிப்படையில் தான் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். பரிந்துரையின் அடிப்படையில் அல்ல. பிஎச்டி படித்தவர்கள் மற்றும் நெட், செட் தேர்வு முடித்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். சரியான முறையில் தகுந்தவர்களை தேர்ந்தெடுக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டுள்ளது.

9915 பேர் இதற்காக விண்ணப்பித்துள்ளனர். இதில் யார் எந்த பாடத்திட்டங்களின் அடிப்படையில் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள் என்பதை நாளைக்கு அறிவிப்போம். இந்த தேர்வு முறையில் முழுக்க முழுக்க இட ஒதுக்கீடு பின்பற்றப்படும்’’ என்று தெரிவித்துள்ளார்.

‘நே ரெக்கமெண்டேசன்’ என அமைச்சர் அறிவித்ததோடு இல்லாமல், அதனை செயல்படுத்த வேண்டும் என்பதுதான் கல்வியாளர்களின் கருத்தாக இருக்கிறது!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal