தமிழகத்தில் ரேஷன் கடைகளில் விரல் ரேகை மூலம் பொருள் வாங்க முடியாதவர்கள் கண் கருவிழி கொண்டு பொருள் வாங்கலாம். பெரம்பலூர் மாவட்டங்களில் இந்த முறை நடைமுறையில் உள்ளது. விரைவில் அனைத்து மாவட்டங்களிலும் இது அமலுக்கு வரும். மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள் ரேஷன் கடைகளுக்கு செல்வதில் சிரமம் இருந்தால் அங்கு விண்ணப்பங்களை பூர்த்தி செய்து ஒருவரை நியமித்து அவர்கள் மூலம் பொருள் வாங்கிக் கொள்ளலாம். பொங்கல் பரிசுத் தொகுப்பு குறித்து முதலமைச்சர் அறிவிப்பார். தமிழகத்தில் 3,500 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் விரைவில் திறக்கப்படும் என்று தமிழக உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி.

தஞ்சாவூர் அடுத்த பிள்ளையார்பட்டியில் உள்ள அரசு நெல் கொள்முதல் சேமிப்பு கிடங்கினை தமிழக உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், உணவுத் துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மண்டல முதுநிலை மேலாளர் உமா மகேஸ்வரி, தாசில்தார் சக்திவேல் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

இதன் பின்னர் உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
தமிழகத்தில் மழைக் காலங்களில் நெல்மணிகள் நனையாமல் இருப்பதற்காக தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, திருச்சி உள்ளிட்ட 20 இடங்களில் 238 கோடி ரூபாய் மதிப்பில் மேற்கூரை மூடிய செமி குடோன்கள் கட்டும் பணி நடந்து வருகிறது. 2 லட்சத்து 86 ஆயிரம் 350 மெட்ரிக் டன் அளவுக்கு நெல்மணிகளை பாதுகாக்க முடியும். இந்த பணிகள் அனைத்தும் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 10 ஆம் தேதிக்குள் முடிவடையும்.

இது தவிர நுகர்பொருள் வாணிபக் கழகம், கூட்டுறவுத் துறை, அரசு துறை கட்டடங்களிலும் நபார்டு சேமிப்பு கிடங்கு கட்டும் பணி நடைபெற்று வருகிறது. அவற்றின் மூலம் 7 லட்சத்து 94 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் சேமிக்க முடியும். தற்போதைய ராபி பருவத்தில் 8 லட்சத்து 54 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு உள்ளது. வருகின்ற பருவத்தில் 58 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

By Divya