தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை ஒவ்வொரு விஷயத்திலும் அதிரடி காட்டி வருகிறார். ஆளுங்கட்சியைத்தான் அலற விடுகிறார் என்றால், சொந்தக் கட்சியிலும் அதிரடி நடவடிக்கை எடுத்து அசத்தி வருகிறார்!

பிரபல நடிகையாக இருந்த காயத்திரி ரகுராம், தன்னை முழு நேர அரசியல் வாதியாக மாற்றி பாஐகவில் 8 ஆண்டுகளாக பணியாற்றினார். அப்போது கலை மற்றும் கலாச்சார பிரிவு தலைவராக பொறுப்பு வகித்தார். அப்போது அவருக்கும் அவர் தலைமையின் கீழ் செயல்பட்ட நிர்வாகிகளுக்குள் மோதல் ஏற்பட்டதால் காயத்திரி ரகுராம் அந்த பதவியில் இருந்து நீக்கப்பட்டார். இதனையடுத்து சில நாட்களுக்கு பிறகு காயத்திரி ரகுராமிற்கு வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சிப் பிரிவின் மாநிலத் தலைவராக பொறுப்பு வழங்கப்பட்டது. அந்த பொறுப்பில் செயல்பட்டு வந்த அவர், பாஐகவில் தன்னை புறக்கணிப்பதாகவும், காசி தமிழ் சங்கத்திற்கு தனக்கு உரிய அங்கீகாரம் அளிக்கவில்லையென தெரிவித்து இருந்தார்.

மேலும் கோவை மாவட்ட பாஜக நிர்வாகிக்கும் காயத்திரி ரகுராம் இடையே மோதல் போக்கு ஏற்பட்டது. இதனையும் தனது டுவிட்டர் பக்கத்திலும் பதிவிட்டிருந்தார். உட்கட்சி பிரச்சனையை கட்சி தலைமையிடம் சொல்லாமல் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்தது பாஜக நிர்வாகிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதனையடுத்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிவிப்பில், கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருவதால் கட்சியில் அவர் வகித்து வரும் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் ஆறு மாத காலத்திற்கு நீக்கப்படுகிறார்.ஆகவே, கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் காயத்ரி ரகுராமிடம் கட்சி சார்பாக எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ள வேண்டாம் என கேட்டுக்கொள்வதாக அந்த அறிக்கையில் தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில் தான், காயத்ரி ரகுராம் வகித்த அந்த பொறுப்புக்கு இசையமைப்பாளர் தீனா நியமனம் செய்யப்பட்டுள்ளார். மேலும், இந்த அமைப்பின் துணை தலைவராக ஆனந்த் மெய்யாசாமி என்பவரும் நியமிக்கப்பட்டுள்ளார் என்றும் பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார். எனவே காயத்திரி ரகுராம் மீதான சஸ்பெண்ட் உத்தரவு ரத்து செய்யப்பட்டு மீண்டும் கட்சி பணியாற்ற வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சிப் பிரிவின் மாநிலத் தலைவராக இசையமைப்பாளர் தீனாவை நியமித்ததன் மூலம் அதற்கான வாய்ப்பு கேள்வி குறியாகியுள்ளதாகவே கூறப்படுகிறது

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal