மும்பையில் பெண் ஒருவர் தனது காதலருடன் சேர்ந்து சதித் திட்டம் தீட்டி கணவருக்கு உணவில் ஸ்லோ பாய்சன் கலந்து கொடுத்து கொலை செய்துள்ளார்.

இந்த பகீர் சம்பவத்தை மும்பை குற்றப் பிரிவு காவல்துறை கண்டுபிடித்து அம்பலமாக்கியுள்ளனர்.

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையைச் சேர்ந்த 45 வயது தொழிலதிபர் கமல்காந்த் ஷா. இவர் கடந்த செப்டம்பர் மாதம் 19ஆம் தேதி திடீர் உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். கமல்காந்துக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு ஆகஸ்ட் 27ஆம் தேதி அந்தேரியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.பின்னர் அங்கிருந்து பாம்பே மருத்துவமனைக்கு செப்டம்பர் 3ஆம் தேதி மாற்றப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி செப்டம்பர் 19ஆம் தேதி உயிரிழந்தார்.

இவரது மரணம் குறித்து சிகிச்சை அளித்த மருத்துவர்களுக்கும், கமல்காந்தின் சகோதரிக்கும் சந்தேகம் எழுந்தது. காரணம் கமல்காந்தின் ரத்தத்தில் இயல்புக்கு மாறாக ஆர்சனிக் மற்றும் தாலியம் போன்ற தாதுக்கள் கலந்துள்ளன. இதனால் சந்தேகம் அடைந்த மருத்துவர்கள் அதை பரிசோதனைக்கு அனுப்பி காவல்துறைக்கும் புகார் தந்து உஷார் செய்தனர்.

அதேபோல், கமல்காந்த்தின் மனைவி மீதும் சந்தேகம் இருப்பதாக அவரின் சகோதரியும் புகார் அளித்துள்ளார். இவற்றின் அடிப்படையில் காவல்துறை நடத்திய புலன் விசாரணையில் உண்மை அம்பலமாகியுள்ளது. கமல்காந்துக்கு, காஜல் என்பவருக்கும் 2002ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது. இருவருக்கும் இரு குழந்தைகள் உள்ளனர். திருமணமாகி சுமார் 20 ஆண்டுகள் கழிந்த நிலையில், சமீப காலமாகவே காஜலுக்கும் கமல்காந்துக்கும் அடிக்கடி சண்டை வந்துள்ளது.

காஜலுக்கு ஹிதேஷ் என்ற நபருடன் திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இது கணவர் கமல்காந்திற்கு தெரிய வரவே இதுவும் சண்டைக்கு முக்கிய காரணமாக இருந்துள்ளது. இந்நிலையில், தனது காதலன் ஹிதேஷுடன் சேர்ந்து கமல்காந்தை தீர்த்துக்கட்டி சொத்துக்களை அபகரிக்க மனைவி காஜல் திட்டம் போட்டுள்ளார். அதன்படி இருவரும் ஆர்சனிக் மற்றும் தாலியம் தாதுக்களை வாங்கியுள்ளனர்.

அதை காஜல் தான் சமைக்கும் உணவில் கலந்து ஸ்லோ பாய்சன் முறையில் கமல்காந்திற்கு தந்துள்ளார். இதை சாப்பிட்ட கமல்காந்த் உடல்நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். மேலும், கமல்காந்த்தின் தாயரும் சில மாதங்களுக்கு முன்னர் இதே முறையில் மரணம் அடைந்தாதல், அதன் பின்னணியிலும் காஜல் இருப்பாரோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

வழக்கை விசாரித்து வரும் மும்பை காவல்துறை காஜல் மற்றும் அவரது காதலன் ஹிதேஷை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி தற்போது சிறையில் அடைத்துள்ளது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal