போக்குவரத்து துறையில் ஏற்கனவே நிதி சுமை உள்ளது. இருப்பினும் நிதி நிலைக்கு ஏற்ப தொழிலாளர்களுக்கு படிப்படியாக பணப்பலன்கள் வழங்கப்படும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரிந்து விருப்ப ஓய்வு பெற்ற பணியாளர்கள் மற்றும் இறந்த பணியாளர்களின் வருங்கால வைப்பு நிதி, பணிக்கொடை, விடுப்பு தொகை உள்ளிட்ட பணப்பலங்களுக்குரிய காசோலைகளை போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் சென்னை பல்லவன் இல்லத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வழங்கினார். தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் கடந்த மே 2020 ஆம் ஆண்டு முதல் மார்ச் 2021 ஆம் ஆண்டு வரை பணிபுரிந்து விருப்பு ஓய்வு பெற்ற பணியாளர்கள், இறந்த பணியாளர்கள் என மொத்தமாக 1241 தொழிலாளர்களுக்கு இன்று தமிழகம் முழுவதும் நடைபெறும் நிகழ்ச்சிகளில் இந்த காசோலைகள் வழங்கப்படுகிறது.

சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் 22 பேருக்கு காசோலையை நேரடியாக வழங்கினார். இதற்காக 242 கோடியே 67 லட்சம் ஒதுக்கப்பட்டு இருப்பதாக போக்குவரத்து துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு போக்குவரத்து கழக தொழிலாளர்களுக்கு ஹூண்டாய் மோட்டார் இந்தியா பவுண்டேஷன் சார்பாக “மிஷன் சென்னை” என்னும் திட்டத்தின் கீழ் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு மற்றும் மருத்துவ வாகன சேவையை கொடியசைத்து துவக்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர்,

‘‘தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் கடந்த மே 2020 ஆம் ஆண்டு முதல் மார்ச் 2021 ஆம் ஆண்டு வரை பணிபுரிந்து விருப்பு ஓய்வு பெற்ற பணியாளர்கள், அதே போன்று இறந்த பணியாளர்கள் என மொத்தமாக 1241 தொழிலாளர்களுக்கு இன்று தமிழகம் முழுவதும் நடைபெறும் நிகழ்ச்சிகளில் இந்த காசோலைகள் வழங்கப்படுகிறது. டீசல் விலை உயர்வு இருந்த போதும் பேருந்து கட்டணம் உயர்த்தபடவில்லை, போக்குவரத்து துறையில் ஏற்கனவே நிதி சுமை உள்ளது. இருப்பினும் மீதம் உள்ளவர்களுக்கு நிதி நிலைக்கு ஏற்ப படிப்படியாக பணப்பலன்கள் வழங்கப்படும்’’ என்று தெரிவித்தார்.

போக்குவரத்துத்துறை அமைச்சரின் அறிவிப்பு, தொழிலாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal